வடமாநிலங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது அல்லது கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களில் இடிந்துவிழுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அது போன்ற ஒரு சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள டெக்ராடூனில் உள்ள நந்தாகீ செளவுக்கியில் ஆற்றின் மீது இருந்த பாலம் கடந்த ஆண்டு பெய்த மழையில் இடிந்து விழுந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். அந்த இடத்தில் ரு.16 கோடியில் புதிய மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்தப் பாலம் கடந்த 12ம் தேதிதான் திறந்து வைக்கப்பட்டது. இங்கு கடந்த இரண்டு நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இம்மழையால் புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட மேம்பாலம் சேதம் அடைந்துள்ளது. மேம்பாலத்தின் இணைப்பு சாலையில் மிகப்பெரிய பள்ளம் விழுந்து அது ஆற்றில் அடித்து செல்லப்பட்டுவிட்டது. உடைந்த பாலம் ஆனாலும் பாலத்திற்கு எந்தவித சேதமும் இல்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் பாலம் திறக்கப்பட்டு 16 நாள்களில் சேதம் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையை மூன்று நாள்களில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேம்பாலத்திற்கு அருகில் பள்ளம் விழுந்ததால் அருகில் உள்ள ஹிமாச்சல பிரதேசத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. ஆற்றில் தண்ணீர் அளவு குறைந்த பிறகுதான் பள்ளம் விழுந்த பகுதியில் மண் போட்டு நிரப்பிச் சரிசெய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேம்பாலத்தைக் கட்ட ஒரு ஆண்டு எடுத்துக்கொண்டது. ஆனால் போக்குவரத்திற்குத் திறக்கப்பட்டு 16 நாள்களில் சேதமாகியுள்ளாதாகவும், தரமில்லாத பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மாநில முதல்வரின் உத்தரவின் பேரில் சம்பவ இடத்தில் மண்போட்டு நிரப்பிப் போக்குவரத்தைச் சரிசெய்ய அதிகாரிகள் முயன்று வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/crime/accidents/flyover-in-uttarakhand-collapses-just-16-days-after-inauguration




