சென்னை, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் நேற்றைய காணொலிக் கூட்டத்தில், தமிழகத்திற்கு தற்போதைய சூழலில் தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக அதிகாரிகள் தெரிவித்ததாக செய்திகள் வருவது அதிர்ச்சி அளிக்கிறது. இது தமிழகத்தின் உரிமையை சிறிது சிறிதாக பறிக்கும் அபாயத்தின் அறிகுறி. கர்நாடகத்தின் இந்த வாதம், காவிரி மேலாண்மை ஆணையத்திலும் பிரதிபலிக்கும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பருவநிலை மற்றும் நீர் இருப்பினைப் பொறுத்து பங்கிட வேண்டிய உரிய நீரின் அளவினை வழங்காமல் கர்நாடக அரசு வெற்று காரணங்களைக் கூறி மழுப்புவது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே, மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் நிலையில் தற்போது காவிரி நதி நீர் பங்கீட்டிலும் முரண்டு பிடிப்பது தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கி விடும். வஞ்சிக்கும் செயல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் தவெக அரசு, அண்டை மாநிலமான கர்நாடகாவின் காங்கிரஸ் ஆட்சியின் இதுபோன்ற செயல்களை கண்டுகொள்ளாமல் இருப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். கூட்டணி தர்மத்திற்காக தமிழகத்தின் உரிமைகளையும், நியாயங்களையும் கர்நாடகாவிடம் அடகு வைக்கும் தவெக அரசின் நடவடிக்கைகளை ஒருபோதும் தமிழக மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். கூட்டணி அரசின் முதல்-அமைச்சர் அவர்களே. தற்போது பருவமழையும் பொய்த்து வரும் சூழலில் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு தமிழகத்திற்கான நதி நீர் பங்கீட்டை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்து டெல்டா மாவட்ட விவசாயிகள் வாழ்வாதாரத்தினைக் காக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/karnatakas-inconsistency-in-cauvery-water-sharing-is-unacceptable-vanathi-srinivasan




