புதுடெல்லி, நாடு முழுவதும் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் இறப்பது வேதனைக்குரியது என மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார். ஓட்டுனர் பற்றாக்குறை நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது எம்.பி.க்கள் சுதா மூர்த்தி, வக்கீல் பி.வில்சன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்டனர். அவற்றுக்கு அந்த துறையின் மந்திரி நிதின் கட்காரி பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. நாங்கள் ஏற்கனவே 300 ஓட்டுனர் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கி இருக்கிறோம். நாட்டில் 22 லட்சம் ஓட்டுனர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. தற்போது ஒவ்வொரு தாலுகா பகுதியிலும் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வ பயிற்சி ஓட்டுனர்களுக்கு அறிவியல் பூர்வமான பயிற்சி அளிக்கப்படுவது அவசியம். இதன் மூலமும், விதிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலமும் நம்மால் விபத்துகளையும், மக்களின் உயிரிழப்பையும் தடுக்க முடியும். அதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். தற்போது நாடு முழுவதும் ஆண்டுக்கு சராசரியாக 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் விபத்துகளில் பலியாகிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். நெடுஞ்சாலைக்கான நிலம் கையகப்படுத்துதல் என்பது மாநில அரசுகளை சார்ந்தது. நிலத்தை கையகப்படுத்துவதுடன் சுற்றுச்சூழல் விவகாரங்களையும் சரிசெய்ய வேண்டும். சுங்கக்கட்டணம் செலுத்தித்தான் ஆக வேண்டும் சாலையில் நல்ல சேவை வேண்டுமென்றால் சுங்கக்கட்டணம் செலுத்தித்தான் ஆக வேண்டும். தற்போது ஆண்டு முழுவதுக்கும் வெறும் ரூ.3 ஆயிரத்துக்கு 'பாஸ்' கிடைக்கிறது. இதனால் சுங்கக்கட்டணம் என்பது பெரிய விஷயம் இல்லை. மக்கள் திருப்தியாக உணர்கிறார்கள். சாலைகள் மேம்பாட்டுக்காக சுங்கக்கட்டணம் வசூலித்துத்தான் ஆக வேண்டும். பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியுள்ள மேகாலயா மற்றும் திரிபுராவில் எங்களுக்கு சுங்கக்கட்டணம் கிடைப்பதில்லை. இவ்வாறு அவர் பதில் அளித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/180-lakh-people-die-in-road-accidents-every-year-union-minister-nitin-gadkari-expresses-grief




