திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் முன்விரோதம் காரணமாக, கொலை செய்த வழக்கில் 3 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.19 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. முன்விரோதத்தில் கொலை திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே கடந்த 2024-ம் ஆண்டு, பெருமாள்குளம் பகுதியை சேர்ந்த ஆலபர்ட் ஜெயக்குமார் (வயது 24) என்பவரை அதே பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளான பிரைட்சன்(25), சம்பத் ராஜா(32), டார்லிங் அருமை குமார்(26) மற்றும் காட்வின் டைட்டஸ்(30) ஆகிய 4 பேரும் சேர்ந்து முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்தனர். 3 பேருக்கு ஆயுள் தண்டனை இது தொடர்பாக களக்காடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்தார். புலன் விசாரணை முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (எண் -IV) நடைபெற்று வந்தது. இந்த நிலையில் முதல் 3 குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி கதிரவன் இன்று (11.9.2026) பிரைட்சன், சம்பத்ராஜா, டார்லிங் அருமை குமார் ஆகிய 3 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு (A1 - A3) ஆயுள் தண்டனையும், தலா ரூ.19 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 4-வது குற்றவாளியான காட்வின்டைட்டஸ்(30) என்பவரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார். எஸ்.பி. பாராட்டு இந்த வழக்கில் திறம்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. சதீஷ்கண்ணன், களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணாகாந்தி, இவ்வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் (தற்போது கன்னியாகுமரி மாவட்டம்), வழக்கின் விசாரணைக்கு உதவி செய்த நீதிமன்ற தலைமை காவலர் சிவபாலன் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் கண்ணன் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி பாராட்டினார். 6 கொலை வழக்குகளில் 12 பேருக்கு தண்டனை 2026-ம் ஆண்டில் இதுவரை 6 கொலை வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு, 12 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் 6 சரித்திர பதிவேடு உடைய குற்றவாளிகள் உள்பட 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது, நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை உரிய முறையில் ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து திறம்பட மேற்கொண்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/tirunelveli-3-convicted-criminals-sentenced-to-life-imprisonment-in-murder-case




