சென்னை, சட்டசபையில் நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின்போது பாமக எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி பேசியதாவது:- இந்தியாவில் எங்கும் இல்லாத சதுப்பு நிலம் சென்னையில்தான் உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அதிசயங்களில் ஒன்று. சென்னை கூவம் ஆறு மிகப்பெரிய அதிசயம். கூவம் ஆறு ஆவடி, அம்பத்தூர் தாண்டி சென்னைக்கு வரும்போது ரசாயன கழிவு கலந்து சாக்கடையாக வருகிறது. நல்ல தண்ணீரில் சாக்கடை கலப்பது சட்டப்படி குற்றமாகும். கூவம் ஆற்றில் குப்பைகள், கழிவுகள் கொட்டுவதை முதலில் தடுக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போதும் கூவம் ஆறு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. தாமிரபரணி ஆற்றில் டன் டன்னாக குப்பைகள் உள்ளன. தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யாமல் அழகுபடுத்தி என்ன பலன்? தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை சரியாக அளவிட்டு மேப்பிங் செய்ய வேண்டும் என்று பேசினார். இதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மேப்பிங் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து சவுமியா அன்புமணி பேசுகையில், “தமிழ்நாட்டில் உள்ள நதிகளை முதலில் இணைக்க வேண்டும். 2008 முதல் காவிரி - குண்டாறு திட்டம் கிடப்பில் உள்ளது. முதலில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அத்திக்கடவு - அவிநாசி 2-வது கட்ட திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். நொய்யல் மற்றும் தாமிரபரணி நதிநீர் இணைப்புப் பணிகள், பாலாறு தடுப்பணை மற்றும் நந்தன் கால்வாய் திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மழை நீர் சேமிப்பை கட்டாயமாக்க வேண்டும். நம் கண் எதிரே நம்முடைய சொத்து கைவிட்டுப்போகிறது என்றால் அது நீர்வளம்தான். எத்தனையோ ஆறு, ஏரி, குளங்கள் காணாமல் போய்விட்டன. கிராமங்களில் ஒரு ஏக்கர் பரம்பரை சொத்துக்காக நீதிமன்றம் வரை சண்டை போடும் மக்கள், நம் கையை விட்டுச் செல்லும் நீர்வளத்தைக் காப்பதில் அக்கறை காட்ட வேண்டும். நீர்தான் நம்முடைய மிகப்பெரிய சொத்து. நம் எதிர்கால தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் மிகப்பெரிய சொத்து நீர்வளம்தான். ஏரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 3-யை செயல்படுத்த வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளை தூர்வாற வேண்டும். செஞ்சி கோட்டையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து குறும்பர் சமுதாயத்திற்காக தாயுள்ளத்தோடு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சவுமியா அன்புமணி கோரிக்கை வைத்தார். இதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார். மேலும் நெய்வேலியில் இருந்த ”தன்னூத்து” குறித்து சவுமியா அன்புமணி விளக்கம் அளித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadus-water-resources-are-slipping-out-of-our-hands-sowmya-anbumani-expresses-anguish




