திருப்பூர், பின்னலாடை நிறுவனங்கள் திருப்பூரில் 2,500-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். பின்னலாடை நிறுவனங்கள் மூலம் உள்ளாடைகள், டி-ஷர்ட் கள், டிராக் பேண்டுகள், இரவு நேரங்களில் அணியும் ஆடைகள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. திருப்பூர் பின்னலாடை மூலம் ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டப்படுகிறது. அதாவது, உள்நாட்டு விற்பனை சந்தை மூலம் ரூ.27 ஆயிரம் கோடியும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் சுமார் ரூ.42,500 கோடி முதல் ரூ.45,000 கோடி வரையிலும் வருமானம் பெறப்படுகிறது. 5 சதவீதம் விலை உயர்வு மூலப்பொருள் மற்றும் உற்பத்தி செலவுகளில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள உயர்வு காரணமாக உள்ளாடைகள், இரவு நேரங்களில் அணியும் ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் ஆகியவற்றின் விலை 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூரில் உள்ள தென்னிந்திய உள்ளாடை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- பருத்தி விலை ஒரு கேண்டி (355 முதல் 356 கிலோ) ரூ.74 ஆயிரத்தை எட்டியுள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் பின்னலாடைக்குரிய நூல் விலை கிலோவுக்கு 170 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மேலும் தொழிலாளர் கூலி, சாயம் பூசுதல், எலாஸ்டிக், பதப்படுத்துதல், தையல் மற்றும் போக்குவரத்துக்கான கட்டணங்களும் அதிகரித்துள்ளன. இது உற்பத்தியாளர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த உற்பத்தி செலவு சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. தடையற்ற மூலப்பொருட்கள் வினியோகம் இதன் காரணமாக உள்ளாடைகளின் விலையை முதலில் 10 சதவீதம் உயர்த்தலாம் என முடிவெடுத்தோம். உள்நாட்டு சந்தையில் தேவை குறைவாக இருந்ததால், முழு விலை உயர்வையும் நுகர்வோர் மீது சுமத்துவது கடினமாக இருந்தது. இதனால், விலை உயர்வு 5 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டது. உள்நாட்டு சந்தைக்கான உள்ளாடைகள் பொதுவாக சுமார் 90 சதவீதம் பருத்தி மற்றும் 10 சதவீதம் செயற்கை இழை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. வெளி ஆடைகளை பொறுத்தவரை, பருத்தி இருப்பு குறைந்ததால் 5 மாதங்களுக்கு முன்பு உற்பத்தியாளர்கள் செயற்கை இழையின் அளவை 50 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்த்தி உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றனர். பண்டிகை கால தேவையை பூர்த்தி செய்யவும், 38 நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களைப் பயன்படுத்திக்கொள்ளவும் நூல், பருத்தி மற்றும் பிற மூலப்பொருட்களின் தடையற்ற உள்நாட்டு வினியோகத்தை உறுதி செய்ய மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-manufacturers-decide-to-hike-prices-of-childrens-clothing-and-innerwear




