Articolo completo
புனேயில் லோஹாகட் கோட்டையில் கேதன் அகர்வால் என்பவர் மலையில் உச்சியில் இருந்து தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக கேதனின் வருங்கால மனைவி ஷியா மற்றும் ஷியாவின் காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இரண்டு பேரும் இக்கொலைக்காக ஒரு மாதத்திற்கும் மேலாக முயற்சி செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், 26 வயதான தொழிலதிபர் கேதன் அகர்வாலின் வருங்கால மனைவி ஷியா கோயல் மற்றும் அவரது காதலன் சேதன் சௌத்ரி ஆகியோர், அவரைக் கொலை செய்ய பலமுறை முயன்று, இறுதியில் ஜூன் 18 அன்று லோஹாகட் கோட்டையில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் அவரைத் தள்ளிவிட்டுக் கொன்றதாக தெரிய வந்துள்ளது. கடந்த 18ம் தேதிக்கு முன்பு அதே லோஹாகட் கோட்டையில் வைத்து கேதனை கொலை செய்ய மூன்று முறை முயற்சி செய்துள்ளனர். ஆனால் மூன்று முறையும் திட்டமிட்டபடி விஷயங்கள் அமையாததால் அந்த முயற்சிகளைக் கைவிட்டு, சரியான சூழலையும் இடத்தையும் சேதனும், ஷியாவும் தொடர்ந்து தேடி இறுதியில் ஏற்கனவே மூன்று முறை முயற்சி செய்த இடத்திலே தங்களது காரியத்தை முடித்தனர். முதல் முறை மே 31ம் தேதி கேதனை ஷியா லோஹாகட் மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்டார். ஆனால் இதில் அவர் புதரை பிடித்துக்கொண்டு தப்பிவிட்டார். இதனால் நிலைமையை சமாளிக்க ஷியா பாம்பு, பாம்பு என்றும், பாம்பிடமிருந்து காப்பாற்றுவதற்காக தள்ளிவிட்டதாகவும் கூறி தப்பித்துக்கொண்டார். இம்மாதம் 4ம் தேதி மீண்டும் கேதனை ஷியா லோஹாகட் கோட்டைக்கு வருமாறு அழைத்தார். ஆனால் இம்முறை கேதனை அவரது தாயார் அனுப்பவில்லை. இதனால் இதில் தப்பித்துக்கொண்டார். கடந்த 14ம் தேதி மீண்டும் கேதனை லோஹாகட் கோட்டைக்கு ஷியா அழைத்துசென்றார். ஆனால் அன்று கோட்டையை பார்க்க அதிக கூட்டம் வந்திருந்தது. எனவே அன்றைய தினம் ஷியாவால் தனது திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. நான்காவது முயற்சியாக ஷியா தனது பிறந்தநாளைக் கொண்டாடும் சாக்குப்போக்கின் கீழ், மீண்டும் லோஹாகட் கோட்டைக்கு செல்லலாம் என்று கேதனை கட்டாயப்படுத்தினார். ஆனால் கேதன் அதற்குப் பதிலாக ஒரு ரிசார்டில் பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டிருந்தார். ஆனால் ஷியா கட்டாயப்படுத்தி கோட்டைக்கு அழைத்து சென்றார். இதற்காக அவரை சம்மதிக்க வைக்க அவரது குடும்பத்தினரின் உதவியையும் ஷியா நாடினார் என்று போலீஸ் விசாரணையில் கேதனின் தந்தை விஷால் அகர்வால் தெரிவித்துள்ளார். அவர்கள் கோட்டைக்கு செல்வது உறுதியானதும் ஷியா தனது காதலன் சேதனுக்கு போன் செய்து தகவல் கொடுத்தார். கேதனும், ஷியாவும் கோட்டைக்கு மலையில் ஏறிச்சென்ற போது அவர்களுக்கு பின்னால் சேதன் முகத்தை மூடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு கோட் அணிந்தபடி மெதுவாக நடந்து சென்றார். அவர் அவர்களுக்கு பின்னால் நடந்து சென்ற காட்சி கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது. அதோடு கேதன் மலை உச்சியில் இருந்து கீழே விழுந்த இடத்திலும் சேதன் இருந்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுதான் போலீஸாருக்கு இக்கொலையில் முக்கிய தடயமாக அமைந்தது. போலீஸார் ஆரம்பத்தில் இதனை ஒரு விபத்தாகவே கருதினர். ஆனால் அதனை கேதனின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. கேதன் அனுபவம் வாய்ந்த மலையேற்ற வீரர் என்று சுட்டிக்காட்டிய அவர்கள், எப்படி இப்படியொரு சம்பவம் நடந்திருக்கும் என்று கேள்வி எழுப்பினர். அவர்களின் வற்புறுத்தல் காரணமாக முழுமையாக விசாரிக்க வேண்டிய நிலைக்கு போலீஸார் தள்ளப்பட்டனர். ஆனால் விசாரணையின் இறுதியில் ஷியாவிற்கும் சேத்தனுக்கும் இடையே உறவு இக்கொலைக்கு வழிவகுத்தது தெரிய வந்தது.! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Articolo completo — vedi il link sotto




