புதுடெல்லி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி 'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களது போராட்டத்துக்கு பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஆதரவு தெரிவித்தார். அத்துடன் அவர்களது போராட்ட இடத்திலேயே உண்ணாவிரதத்தையும் தொடங்கினார். கரப்பான் பூச்சி கட்சியினரின் கோரிக்கைகளுடன் லடாக் தொடர்பான சில கோரிக்கைகளையும் அவர் வலியுறுத்தினார். இந்தநிலையில் கடந்த 18-ந்தேதி அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் போலீசார் அவரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினார்கள். அவர் டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நாடாளுமன்றம் நோக்கி பேரணி இதற்கிடையில், டெல்லியில் நேற்று நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற கரப்பான் பூச்சி கட்சியினரை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். எவ்வளவு சொல்லியும் போராட்டக்காரர்கள் கேட்காததால் அவர்களை நோக்கி போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினார்கள். இதனால் கூட்டம் சிதறி ஓடியது. இதனை பயன்படுத்தி போலீசார் முழு கூட்டத்தையும் விரட்டினர். நாடாளுமன்றத்தைச் சுற்றி கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில், டெல்லியில் நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவுக்கு எதிராக நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தில் 118 காவலர்கள், 60 போராட்டக்காரர்கள் காயம் அடைந்ததாகவும், 20 அரசு வாகனங்கள் சேதமடைந்ததாகவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தை இன்றும் முற்றுகையிட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஜந்தர்மந்தரில் இளைஞர்கள் மீண்டும் குவியத் தொடங்கியுள்ளனர். விவசாயிகள் போராட்டம் இதைபோல அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராக டெல்லியில் இன்று போராட்டம் நடத்த விவசாயிகள் ஆயத்தமாகியுள்ளனர். விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க பஞ்சாப், அரியானா மாநிலங்களின் எல்லைகள் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாய சங்கங்களின் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/118-cops-injured-70-detained-after-cjp-protest-turns-violent-in-delhi




