ஜகார்த்தா, இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 51 பேர் பலியாகி உள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. பயங்கர நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலின் 'நெருப்பு வளையம்' பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியா, உலகிலேயே நிலநடுக்கங்களும், எரிமலை வெடிப்புகளும் அதிகம் நிகழும் ஆபத்தான நாடாக கருதப்படுகிறது. கடந்த 2004-ம் ஆண்டு இங்கு ஏற்பட்ட சுனாமி, உலகையே உலுக்கிய சோகம் இன்றும் மக்கள் மனதில் ஆறா வடுவாக உள்ளது. இந்நிலையில், அங்கு மற்றொரு பெரும் இயற்கைப் பேரிடர் அரங்கேறியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள புளோரஸ் கடல் பகுதியில், உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 5.58 மணிக்கு மக்கள் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில், கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 51 பேர் பலி இது ரிக்டர் அளவுகோலில் 7.7 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தின் அதிர்வால் வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகளைப் போல சரிந்து தரைமட்டமாயின. தூக்கத்தில் இருந்த மக்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினர். சிக்கா, மங்கராய் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் இடிந்தும், நிலச்சரிவில் சிக்கியும் இதுவரை 51 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மீட்புக் குழுவினர் மேலும் நான்கு உடல்களை மீட்டதைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்தது. நிலச்சரிவுகளால் 900-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தும் சாலைகள் துண்டிக்கப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்த நிலையில், குறைந்தது 101 பேர் காயமடைந்தனர். நிலநடுக்கத்தால் சுமார் 5,000 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை முன்னதாக நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளுக்கு அரசு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்தது. இதனால் பீதியடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு, உயரமான மலைப் பகுதிகளை நோக்கி ஓடி னர். முக்கிய நெடுஞ்சாலை மூடல் பின்னர் கடல் மட்டத்தில் பெரிய மாற்றம் இல்லாததால் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. நிலநடுக்கத்தால் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மலைப்பாதைகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் 700 கி.மீ நீளமுள்ள முக்கிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் இதனால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மீட்புக்குழுவினர் செல்ல முடியாமல் திணறி வருகின்றனர். தற்போது ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுவதால் இந்தோனேசியாவில் பெரும் சோகம் நிலவுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/world/51-dead-after-magnitude-77-earthquake-strikes-indonesias-flores




