ஈரோடு மாவட்டம் தாளவாடி காவல்நிலையத்தின் பின்புறம் உள்ள காவலர்களுக்கான ஓய்வு அறையில் இளைஞர் ஒருவரை சங்கிலியால் கைகளை ஜன்னலுடன் கட்டி வைத்து காவலர்கள் கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி காண்போரை பதை பதைக்கச் செய்து வருகிறது. இந்த செயலுக்கு மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் முதல் உள்ளூர் மக்கள் வரை கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தை தற்போது நடைபெற்றதாக சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் செய்தி வெளியிட்டு வருகின்றனர். அது உண்மை அல்ல என ஈரோடு மாவட்ட காவல்துறை அதிகாரபூர்வமாக விளக்கமளித்துள்ளது. கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணை என மகாதேவா என்ற இளைஞரை அழைத்துச் சென்ற தாளவாடி காவல்துறையினர், காவல் நிலையத்திற்குப் பின்புறம் உள்ள காவலர் ஓய்வறை ஜன்னல் கம்பியில் சங்கிலியால் கைகளைக் கட்டி வைத்து கடுமையாகத் தாக்கித் துன்புறுத்தியுள்ளனர். மகாதேவாவிற்குத் தொடர்பில்லாத மற்றொரு கொள்ளை சம்பவத்திலும் பொறுப்பேற்று ஒத்துக்கொள்ளுமாறு சித்ரவதை செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. துன்புறுத்தலைத் தாங்க முடியாமல் கதறும் இளைஞர் மாதேவாவை மனிதாபமற்ற முறையில் தாக்கும் கொடூர காவலர்களின் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி காண்போரைப் பதற வைக்கின்றன. இளைஞரைச் சித்ரவதை செய்யும் காவலர்கள் இதன் பின்னணி குறித்து ஈரோடு மாவட்டக் காவல்துறை, "தாளவாடி காவல் நிலையத்தின் ஓய்வு அறையில் மாது (எ) மகாதேவா (19) என்பவரைக் காவல்துறையினர் தற்போது சரமாரியாக தாக்கியதாக சில செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டு வருகின்றனர். வீடியோவில் இருப்பவர் தாளவாடி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான மாது என்கிற மகாதேவா ஆவார். இவர், கடந்த 20- 09- 2024-ம் தேதி குற்ற வழக்குகளுக்காக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவத்தை தற்போது, கடந்த சில நாள்களுக்கு முன்பு கைதி ஒருவரை போலீஸார் தாக்கியதாக தவறாகச் செய்தி வெளியிட்டு வருகின்றனர். தற்போது இது போன்று ஒரு நிகழ்வு நடைபெறவில்லை என ஈரோடு மாவட்டக் காவல்துறை சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், "காவல் நிலைய மரணங்கள் அல்லது கொடூரத் தாக்குதல்கள் நடக்கும்போது, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது வெறும் பணியிட மாற்றம் அல்லது தற்காலிக சஸ்பெண்ட் போன்ற சடங்கு ரீதியான நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படுகின்றன. தவறு செய்யும் போலீஸார் மீது உடனடியாக குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஜனநாயக நாட்டில் இத்தகைய மனித உரிமை மீறல்கள் முற்றிலுமாகத் தடுக்கப்பட வேண்டும். இந்தக் கொடூரம் எப்போது யாரால் நிகழ்த்தப்பட்டிருந்தாலும், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உரிமைகள் ஆணையம் தலையிட வேண்டும்" என்றனர். மடப்புரம் அஜித்குமார் காவல் மரணம்: டிஎஸ்பி உட்பட நால்வர் மீது கொலை வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/crime/thalavadi-youth-tortured-while-chained-shocking-video-reveals-police-brutality



