மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் ஒன்பது மாதக் கைக்குழந்தை உட்பட மூன்று மைனர் சகோதரிகள் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்துள்ளனர். இசாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிபோரா குர்த் கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இக்கிராமத்தைச் சேர்ந்த பால்குந்த் குஷ்வாஹாவின் மகள்களான பூனம்(7), மனிஷா(3) மற்றும் ஒன்பது மாதக் குழந்தை சாஹத் ஆகியோர் நேற்று இரவு கத்திரிக்காய் புரோட்டா மற்றும் ரொட்டி சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் அவர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டு மூன்று பேரும் பரிதாபமாக இறந்து போனார்கள். அவர்களை மருத்துமனைக்குக் கொண்டு செல்லவில்லை. இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்காமல் 3 சகோதரிகளின் உடல்களையும், பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து புதைத்துவிட்டனர். இது குறித்து அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனே போலீஸாரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் கிராமத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் புதைக்கப்பட்ட சிறுமிகளின் உடல்களைப் பலத்த பாதுகாப்புடன் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மாவட்ட மருத்துவ அதிகாரி பி.குப்தா கூறுகையில், "இந்த விஷயம் எங்கள் கவனத்திற்கு வந்தவுடன், நான் எனது முழு குழுவுடன் சம்பவ இடத்திற்குச் சென்றேன். காவல்துறை, வருவாய் மற்றும் தடயவியல் குழுக்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். அனைத்துத் தகவல்களையும் சேகரித்து வருகிறோம். உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை கிடைத்த பிறகுதான் மரணத்திற்கான காரணம குறித்து தெரிய வரும்'' என்று தெரிவித்தார். போலீஸார் சிறுமிகளின் குடும்பத்தினரிடம் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். பாஜக-விலிருந்து விலகிய நடிகர் தேவன் தவெக-வில் இணைகிறாரா? விஜய்யைச் சந்திக்க காரணம் என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/trending/three-minor-sisters-die-mysteriously-after-eating-brinjal-parotta-parents-bury-them-secretly




