தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலையான ஜி.எஸ்.டி சாலைக்கு அருகில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் இந்த மருத்துவமனை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் ஏழை - எளிய மக்களுக்கு முக்கியமான மருத்துவ ஆதாரமாக விளங்குகிறது. இத்தகைய சூழலில், மருத்துவமனை வளாகத்தில் வசதி குறைபாடு, சுகாதார சீர்கேடு, பராமரிப்பின்மை ஆகியவை சிகிச்சைக்காக வரும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துகின்றன. சேதமடைந்த நிலையில் காணப்படும் சாலை:- மருத்துவமனை வளாகத்துக்குள் நுழையும்போதே சாலையின் நிலை கவனத்தை ஈர்க்கிறது. சில பகுதிகளில் சாலை சேதமடைந்து பள்ளங்களுடன் காணப்படுகிறது. மழைக்காலங்களில் அந்தப் பள்ளங்களில் மழைநீர் தேங்கும் நிலையும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள் பயன்படுத்தும் வளாகத்துக்குள் சாலை இவ்வாறு சேதமடைந்திருப்பது, நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களிடையே கவலையை ஏற்படுத்துகிறது. முறையாகப் பராமரிக்கப்படாத குடிநீர் குழாய்கள்:- மருத்துவமனையில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், சில குடிநீர் குழாய்கள் முறையாகப் பராமரிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன. சில குழாய்களில் பாசி படிந்தும், துருப்பிடித்தும் இருந்தன. குடிநீர் அருந்துவதற்காக வைக்கப்பட்டிருந்த சில குவளைகளும் போதிய சுகாதாரத்துடன் பராமரிக்கப்படாத நிலையில் இருந்தன. மேலும், சில குழாய்களில் தண்ணீர் வருவதில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். தினமும் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் வந்து செல்லும் இடத்தில் குடிநீர் வசதி முறையாகப் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. வளாகத்தில் அதிகரிக்கும் தெருநாய்களின் நடமாட்டம்:- மருத்துவமனை வளாகத்துக்குள் தெருநாய்களின் நடமாட்டமும் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு வருபவர்களில் சிலர் நாய்களுக்கு உணவு வழங்குவதால், அவை வளாகத்திலேயே தொடர்ந்து சுற்றித் திரிவதாக அங்கு இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர். சிகிச்சைப் பிரிவு கட்டடங்களின் அருகிலும் நாய்கள் நடமாடுவதைக் காண முடிகிறது. சில நேரங்களில் நாய்கள் துரத்துவதாகவும் அங்கு வருபவர்கள் கூறுகிறார்கள். மருத்துவக் கழிவுகள் முறையாக அகற்றப்படுகின்றனவா? மருத்துவமனையின் சில பகுதிகளில் மருத்துவக் கழிவுகள் மற்றும் பிற குப்பைகள் கீழே கிடப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக, அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடங்களுக்குப் பின்புறம் மருத்துவக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இது குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது, சில நோயாளிகள் ஜன்னல் வழியாகக் கழிவுகளை வெளியே வீசிவிடுவதாகத் தெரிவித்தனர். மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அந்தப் பகுதியை ஒட்டியுள்ள காலியிடங்களிலும் குப்பைகள் கொட்டப்படுவதாகச் சொல்கிறார்கள். இதனால், மருத்துவக் கழிவுகள் அனைத்தும் விதிமுறைகளின்படி முறையாக அகற்றப்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது. தீர்வு காணப்படுமா? தினமும் 2,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்லும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சாலை, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாகப் பராமரிக்கப்படுவது அவசியம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/chengalpet-government-hospital-needs-attention



