அமெரிக்க கனவு, காதல், திருமணம், துரோகம். என ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தை மிஞ்சும் அத்தனை அம்சங்களும் அடங்கிய ஒரு கொடூர சம்பவம் அமெரிக்காவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது திருமணம் மீறிய உறவுக்காக, திருமணம் முடித்த சில மாதங்களிலேயே மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, சுமார் 9 மாதங்களாக நாடகமாடிய இந்திய மென்பொருள் பொறியாளர் ஒருவரை அமெரிக்காவில் பெல்வ்யூ காவல்துறை கைது செய்துள்ளது. இந்தச் சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி, அவினாஷ் நர்னே (30) என்ற மென்பொருள் மேம்பாட்டுப் பொறியாளர், காவல்துறைக்கு ஓர் அவசர அழைப்பு விடுத்தார். தனது மனைவி ராஜிதா சப்பினேனி (27) குளியலறையில் தன்னைத் தானே பூட்டிக்கொண்டதாகவும், மீண்டும் மீண்டும் அழைத்தும் கதவைத் திறக்கவில்லை என்றும் பதற்றத்துடன் கூறினார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், குளியலறையின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ராஜிதா தரையில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ந்தனர். உடனடியாக, அவர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அமெரிக்கா விசாரணையின்போது, "நான் சில வேலைகளுக்காக சுமார் 40 நிமிடங்கள் வெளியே சென்றிருந்தேன். திரும்பி வந்து பார்த்தபோது, குளியலறையின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது" என அவினாஷ் ஒரு துயரக் கணவனாக வாக்குமூலம் அளித்தார். ஆனால், அவினாஷ் வெளியே சென்றதாகக் கூறிய நேரத்தில், அவர்களது வீட்டிற்குள் வேறு யாரும் நுழைந்ததற்கான எந்த ஆதாரமும் அதிகாரிகளுக்குக் கிடைக்கவில்லை. இதுவே வழக்கின் முதல் சந்தேகப் பொறியானது. அடுத்த நாளே, கிங் கவுன்டி மருத்துவப் பரிசோதகர் அலுவலகத்தின் அறிக்கை, இந்த வழக்கில் ஒரு மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ராஜிதாவின் மரணம் தற்கொலை அல்ல, அது ஒரு படுகொலை என்றும், கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்றும் அந்த அறிக்கை திட்டவட்டமாகத் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, காவல்துறையின் விசாரணை அவினாஷைச் சுற்றி இறுகத் தொடங்கியது. விசாரணை ஆழமாகச் செல்லச் செல்ல, இந்த கொலையின் பின்னணியில் இருந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. அவினாஷுக்கு இந்தியாவில் பல ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் "ரகசிய உறவு" இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையில்தான், கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி, பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட ராஜிதாவை அவினாஷ் திருமணம் செய்துள்ளார். கொடுமையின் உச்சமாக, அவினாஷின் திருமணத்தில் அவரது ரகசிய காதலியும் கலந்துகொண்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். திருமணத்திற்குப் பிறகும், காதலர்கள் இருவரும் தங்கள் உறவைத் தொடர்ந்துள்ளனர். கொலை நடந்த நாளன்று, அவினாஷ் தனது காதலிக்கு குறைந்தது நான்கு முறையாவது தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். குளியலறையின் கதவை உடைக்க முயற்சிப்பதாக காவல்துறையிடம் நாடகமாடிய நேரத்தில் கூட, அவர் தனது காதலியுடன் பேசியிருக்கிறார். மேலும், தனது மனைவியின் சடலத்தை புகைப்படம் எடுத்து அதைத் தனது காதலிக்கு அனுப்பிய கொடூரமும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதவிர, ராஜிதா இறப்பதற்கு முன்பு பலமுறை அவினாஷுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளும் முக்கிய ஆதாரங்களாக சிக்கியுள்ளன. அவினாஷ் தனக்குக் கொடுத்த பானங்கள் "கசப்பாக" இருப்பதாகவும், சில சமயங்களில் "மருந்து" மற்றும் "இருமல் மருந்து" சுவைப்பதாகவும் அவர் புகார் தெரிவித்திருந்தார். ஒன்பது மாத கால நீண்ட விசாரணைக்குப் பிறகு, திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், ஜூலை 5-ம் தேதி அவினாஷ் மீது முதல்-நிலை கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது, 5 மில்லியன் டாலர் பிணையில் அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/crime/indian-techie-avinash-narne-kills-wife-rajitha-in-us



