மயிலாடும்பாறை, மயிலாடும்பாறை அருகே மூதாட்டி மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பமாக. அவரை கழுத்தை நெரித்து கொன்ற அக்காள்-தங்கை கைது செய்யப்பட்டனர். போலீசார் வழக்குப்பதிவு மயிலாடும்பாறை அருகே பொன்நகரை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி ஜக்கம்மாள் (வயது 70). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கழுத்து பகுதியில் கயிற்றால் இறுக்கியது போன்று தழும்புகள் காணப்பட்டது. இதனால் அவரை மர்மநபர்கள் கயிற்றால் கழுத்தை நெரித்துக்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மர்ம நபர்களை விரைந்து பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கடந்த 2 நாட்களாக பொன்நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி பல்வேறு தடயங்களை சேகரித்து வந்தனர். அப்போது ஜக்கம்மாளின் அக்காள் மகள்களான ஜங்கால்பட்டியை சேர்ந்த அய்யம்மாள் (42), நாகராணி (38) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். முன்விரோதம் அதில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது. அதாவது மூதாட்டியை அவர்கள் 2 பேரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அய்யம்மாள், நாகராணியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். அதில், அய்யம்மாள் மற்றும் நாகராணி குடும்பத்தினர் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்ததாகவும், ஜக்கம்மாள் குடும்ப முன்விரோதத்தில் மாந்திரீகம் செய்ததால் தான் தங்களது குடும்பத்துக்கு இந்த நிலை வந்துள்ளதாகவும் 2 பேரும் நினைத்தனர். இதனால் மூதாட்டியை கொலை செய்ய அய்யம்மாளும், நாகராணியும் முடிவு செய்தனர். அதன்படி, சம்பவத்தன்று ஜக்கம்மாள் வீட்டுக்குள் சென்று, கயிற்றால் அவரது கழுத்தை நெரித்து 2 பேரும் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/sisters-arrested-for-strangling-an-elderly-woman-to-death-near-mayiladumparai




