மும்பை, இல்லற வாழ்வில் ஏற்படும் சாதாரண கருத்து வேறுபாடுகள் சித்ரவதை ஆகாது என்று கூறி கணவரின் விவாகரத்து மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ரூ.5 ஆயிரம் ஜீவனாம்சம் மராட்டியத்தை சேர்ந்த 44 வயது நபர் ஒருவருக்கும், பெண் ஒருவருக்கும் கடந்த 2003-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவர் விவாகரத்து கோரி குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், குடும்ப நல கோர்ட்டு விவாகரத்து வழங்க மறுத்ததுடன், மனைவிக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து அந்த நபர் மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்தார். தினமும் சண்டை அவர் தனது மனுவில், "என் மனைவி கோவமான சுபாவம் கொண்டவர். எனது தாயாருடன் சாதாரண விஷயங்களுக்கு எல்லாம் தினமும் சண்டை போடுவார். எனக்கு மனரீதியான கொடுமை தந்தார்" என்று கூறி இருந்தார். அதேபோல மனைவி தரப்பில், கணவர் குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஊர்மிளா ஜோஷி பால்கே, ராஜ் வாகோடே ஆகியோர் அடங்கிய அமர்வு, கணவரின் விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. மனரீதியான சித்ரவதை நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:- கால மாற்றத்திற்கு ஏற்ப திருமண பந்தத்தின் பொறுப்புகளும் மாறியுள்ளன. எந்தவொரு இல்லற வாழ்க்கையிலும் சாதாரண சின்ன, சின்ன சண்டைகளும், கருத்து வேறுபாடுகளும் ஏற்படுவது சகஜம்தான். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் வெறும் எரிச்சலூட்டும் சம்பவங்களை மனரீதியான சித்ரவதை என்று கூறிவிட முடியாது. சட்டப்படி விவாகரத்து வழங்கவேண்டும் என்றால், அந்த கொடுமையானது தம்பதிகள் இருவரும் இனி ஒன்றாக சேர்ந்து வாழவே முடியாது என்ற நிலையை உருவாக்குவதாக இருக்க வேண்டும். ஓரிரு தனிப்பட்ட சம்பவங்களை வைத்து மனரீதியான கொடுமையை தீர்மானிக்க முடியாது. ஒட்டுமொத்த திருமண வாழ்க்கையையும் ஆராய்ந்தே விவாகரத்து வழங்கமுடியும். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/routine-disagreements-not-mental-cruelty-hc-rejects-mans-divorce-plea




