புதுடெல்லி, யு.பி.ஐ. சேவை இந்தியாவில் இன்று பெட்டிக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து வணிக நிறுவனங்களிலும் யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் நடந்து வருகிறது. தேசிய கொடுப்பணவு அமைப்பால் கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த யு.பி.ஐ. தொழில்நுட்பம், இன்று இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக மாறிவிட்டது. எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, 24 மணி நேரமும், ஒரே நொடியில் ஒரு வங்கி கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்குப் பணத்தை நேரடியாக அனுப்ப முடியும். உள்நாட்டை கடந்து சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ் போன்ற பல நாடுகள் இந்தியாவின் இந்த யு.பி.ஐ. கட்டண முறையைத் தங்களின் நாடுகளிலும் அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. புதிய கட்டணம் தற்போது இந்தியாவில் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யு.பி.ஐ. செயலிகள் மூலம் நடக்கும் பணப் பரிவர்த்தனைகளுக்கு, 5 முதல் 7 அடிப்படை புள்ளிகள் வரை புதிய கட்டணம் வசூலிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய கொடுப்பனவு கழகம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளபடி, இந்த புதிய வணிகர் கட்டணம் 0.05 சதவீதம் முதல் 0.07 சதவீதம் வரை விதிக்கப்படவுள்ளது. உதாரணமாக, ஒரு கடையில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான வர்த்தகம் நடந்தால், அதற்கு அதிகபட்சமாக ரூ.5 முதல் ரூ.7 வரை கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது. வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பா? இந்த புதிய கட்டண முறை சாதாரண பொதுமக்களுக்கோ அல்லது ஒரு தனிநபர் மற்றொரு தனிநபருக்கு அனுப்பும் பணப் பரிவர்த்தனைகளுக்கோ முற்றிலும் பொருந்தாது. இது கடைகளில் உள்ள கியூ.ஆர். கோடு மூலம் நடக்கும் பெரியஅளவிலான வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே விதிக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பச் செலவுகளை வங்கிகளும், கூகுள் பே, போன்பே போன்ற நிறுவனங்களுமே ஏற்றுக்கொள்கின்றன. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், வங்கிகளின் பராமரிப்புச் செலவுகளைச் சரி செய்யவும், இந்த மிகக் குறைந்த கட்டண முறையைக் கொண்டு வர நிதி அமைச்சகம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/new-charges-for-digital-money-transactions-made-through-upi-central-government-advises




