இசைக்குயில் எனத் தென்னிந்தியத் திரையுலகம் கொண்டாடிய பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி, இன்று மாலை மைசூரில் காலமானார். அவருக்கு வயது 88. ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்திலுள்ள பலல்படலா என்ற ஊரில் 1938, ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி பிறந்த இவர், குழந்தைப் பருவத்திலேயே முறையாக இசை கற்றவர். தன்னுடைய பதினெட்டாவது வயதில் அகில இந்திய வானொலி நடத்திய பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்திடம் பரிசு வாங்கியிருக்கிறார். தமிழில் முதன் முதலாக பின்னணி பாடகராக பாடும் வாய்ப்பு, `விதியின் விளையாட்டு’ படத்தில் பாடக் கிடைத்தது. அந்த முதல் பாடலே அடுத்த முறை கண்டசாலாவுடன் சேர்ந்து தெலுங்கு பாடலைப் பாடும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. அறிமுகமான வருடத்திலேயே ஆறு மொழிகளில் பாடிய சாதனை இவருடையது. எஸ். ஜானகி கொஞ்சும் சலங்கை படத்தில் காருகுறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வரத்துடன் இணைந்து இவர் பாடிய ‘சிங்கார வேலனே தேவா' பாடல் இன்று வரை இசை ரசிகர்கள் விரும்பிக் கேட்கிற பாடல் எனச் சொல்லலாம். தமிழில் இவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற படம் என்றால் அது இளையராஜா இசையில் வெளியான அன்னக்கிளி தான். ’அன்னக்கிளி உன்னைத் தேடுதே' பாடல் தமிழ் சினிமா இருக்கும் வரை எல்லாருக்கும் இனிக்கும் பாடலாக இருக்கும் என்றால் மிகையில்லை. அன்னக்கிளியைத் தொடர்ந்து இவர் பாடல் இடம் பெறாத படங்களே இல்லை என்ற நிலை தமிழ் சினிமாவில் உருவானது எனச் சொல்லலாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி உள்ளிட்ட 17 மொழிகளில் சுமார் 16000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். பாடகி ஜானகி ஒரு தெலுங்கு படத்துக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதை நான்கு முறையும், தமிழக அரசின் சிறந்த பாடகிக்கான விருதை ஐந்து முறையும் பெற்றிருக்கும் இவருக்கு பத்மபூஷன் விருதை அறிவித்தது மத்திய அரசு. ஆந்திரா, கேரளா, ஒடிசா அரசின் விருதுகளையும் வாங்கியிருக்கிறார். இவரது கணவர் ராமபிரசாத். ஒரே மகன் முரளி கிருஷ்ணா கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பால் உயிரிழந்தது நினைவிருக்கலாம். எஸ்.ஜானகியின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://cinema.vikatan.com/playback-singer-s-janaki-passed-away



