திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மலக் கழிவுகள் கலக்கப்பட்ட நிகழ்வு தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அய்யலூர் அருகே உள்ள தங்கமாபட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்துவதற்காக சின்டெக்ஸ் குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குடிநீர்த் தொட்டிக்குள் பிளாஸ்டிக் கவரில் மலக்கழிவுகள் கிடந்துள்ளன. மேலும் அந்தக் கவருக்குள் எச்சரிக்கை துண்டு சீட்டு ஒன்றும் எழுதி வைக்கப்பட்டிருந்தது. அந்தத் துண்டு சீட்டில் உள்ள எழுத்துகள் அழிந்த நிலையில் 'எங்களுடைய குடியிருப்புகளை அழித்தவர்கள்' என்ற வாசகங்கள் எழுதியிருந்தது. இது குறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வரும் நிலையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. குடிநீர்த் தொட்டியில் இந்த விவகாரம் குறித்து தங்கமாபட்டி மக்கள் நம்மிடையே பேசும்போது, “தற்போது உயர்நிலைப்பள்ளி உள்ள இடத்தில் இதற்கு முன்பு 13 குடும்பங்கள் கடந்த 25 வருடங்களாகக் குடியிருந்த வந்தனர். பள்ளிக்கூடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கும்போது அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சிலருக்கு வேறு இடம் கொடுக்கபட்ட நிலையில் நான்கு குடும்பங்களுக்கு மட்டும் இடம் கொடுக்கபடாததால் பள்ளிக்கு அருகிலேயே குடியிருந்து வருகின்றனர். தற்போது பள்ளியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டி வருவதால், அந்தக் குடும்பங்கள் வெளியே சென்று வர வழியில்லை என்பதால் தங்களுக்கு அரசு சார்பில் மாற்று இடம் வழங்கபட வேண்டுமென இரண்டு ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். தொட்டியில் கிடந்த சீட்டில் கூட ‘எங்களுடைய குடியை கெடுத்தவர்களுக்கு எச்சரிக்கை’ என்ற வாசகங்கள்தான் எழுதப்பட்டிருக்கிறது. இதனால் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றனர் தொட்டியில் இருந்த சீட்டு இது குறித்து அந்தக் குடும்பங்களிடையே விசாரித்த போது, “எங்களுடைய குழந்தைகளும்தான் அந்தப் பள்ளியில் படிக்கிறார்கள். நாங்கள் மலத்தைக் கலந்தால் எங்களுடைய குழந்தைகளும் அந்தத் தண்ணீரைக் குடிப்பார்கள்தானே. நாங்கள் இந்த மாதிரியான கீழ்தரமான வேலைகளைச் செய்யமாட்டோம். எங்களை இந்த இடத்தை விட்டு காலி செய்ய வேண்டுமென பள்ளி நிர்வாகத்தில் உள்ள சில ஆசிரியர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். மேலும் ஆசிரியர்கள் வந்து அடிக்கடி எங்களை வெளியேற வேண்டுமென மிரட்டுவதோடு எங்களை அடிக்க வந்தது தொடர்பாக வடமதுரை காவல்நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளோம். குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த நாளான்று சி.பி.எம் கட்சியினருடன் சென்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து நிலம் வழங்குமாறு மனு கொடுத்து வந்தோம். எங்களை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே ஆசிரியர்களே இந்த விஷயத்தைச் செய்துள்ளார்களா? என்று எங்களுக்குச் சந்தேகமாக உள்ளது. இந்த விவகாரத்தில் எங்களைச் சிக்க வைத்து நாங்கள் இவ்வளவு நாளாகச் செய்து வரும் போராட்டத்தைக்கூட கொச்சைப்படுத்துவதற்காகவே இப்படி செய்துள்ளார்கள்” என்றனர். திண்டுக்கல்: அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலக்கழிவுகள்; பின்னணி என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/dindigul-who-mixed-excreta-into-government-schools-drinking-water-tank-shocking-backstory




