மதுரை, மதுரை முனியாண்டி கோவிலில் நடைபெற்ற கிடாய் வெட்டு திருவிழாவில் சுமார் 25,000-க்கும் மேற்பட்டோருக்கு கறிவிருந்து அன்னதானம் வழங்கப்பட்டது. கிடாய் வெட்டு திருவிழா மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியில் புகழ்பெற்ற 4-வது கழுங்கடி அருள்மிகு ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 38-வது ஆண்டு கிடாய் வெட்டு திருவிழா மற்றும் மாபெரும் சமபந்தி கறிவிருந்து அன்னதானம் இன்று (சனிக்கிழமை) பெரும் விமர்சையாக நடைபெற்று வருகிறது. 450 கிடாய்கள், 10 ஆயிரம் கிலோ அரிசி இத்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய சுமார் 450 ஆட்டுக் கிடாய்கள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, விடிய விடிய 10,000 கிலோ அரிசி மற்றும் டன் கணக்கிலான மசாலாப் பொருட்களைக் கொண்டு பிரம்மாண்டமான முறையில் கறிவிருந்து தயார் செய்யப்பட்டது. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை இன்று காலை முதல் நடைபெற்று வரும் இந்த மகா அன்னதானத்தில், மதுரையின் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 25,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆவி பறக்கும் கறிவிருந்தை பிரசாதமாக உண்டு மகிழ்ந்து வருகின்றனர். விழா சிறப்புகள் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளக்கல் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த பாரம்பரிய விழாவில், முனியாண்டி சுவாமிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள், முக்கியப் புள்ளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரையின் பாரம்பரிய முனியாண்டி விலாஸ் உணவகங்களின் பின்னணியோடு தொடர்புடைய இந்த பிரம்மாண்ட கறிவிருந்து திருவிழா, இப்பகுதியில் பெரும் திருவிழா கோலத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/kidai-vettu-festival-at-muniyandi-temple-madurai-a-grand-curry-feast-for-25000-people



