சென்னை, பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் ரூ.100 கோடி லஞ்சப்புகார் தொடர்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது வழக்கு பாய்ந்தது. இது தொடர்பாக சென்னை, திருச்சியில் 9 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. சோதனை முடிவில் 18-ந்தேதி (நாளை) விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு போலீசார் சம்மன் வழங்கி சென்றனர். இந்நிலையில் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், புதிய தலைமைச் செயலகத்திற்காக பட்டினப்பாக்கம் மக்களை அப்புறப்படுத்தும் முயற்சி என, த.வெ.க. அரசின் அராஜகங்களை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். அதோடு, முதலீடுகளை ஈர்க்கச் சென்ற வெளிநாட்டுப் பயணத்தின் உண்மை நிலையும் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், வழக்கம்போல மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக, நேற்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அதிகாரத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்துவதாலும், அடக்குமுறைகளாலும் தி.மு.கழகத்தின் குரலை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எல்லாம் தி.மு.கழகம் ஒருபோதும் அடிபணியாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/raid-on-anbil-maheshs-house-is-merely-to-divert-public-attention-kanimozhi-criticizes




