26 ஆண்டுகளாக அமலில் இருக்கும் பேனர் தடைச் சட்டம்! புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2000 ஆம் முதல் பேனர் தடுப்புச் சட்டம் அமலில் இருக்கிறது. அதுதவிர சென்னை உயர் நீதிமன்றத்தின் நிலையாணையும் இருக்கிறது. இவற்றின் மூலம் பொது இடங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் புதுச்சேரியின் எந்த அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் அவற்றைக் கடைபிடிப்பதில்லை. பலகோடி ரூபாய் செலவில் போடப்பட்ட புதிய சாலைகளில் பள்ளங்கள் தோண்டி, அதில் அரசியல் தலைவர்களின் பேனர்கள் நடப்படும். அந்த பேனர்களை வைப்பது அரசியல் பலம் மிக்கவர்கள் என்பதால், அதிகாரிகளும் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். அதையும் மீறி சில அதிகாரிகள் ஆக்டிவாக செயல்பட்டால், அரசியல் தலைவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் ரௌடிகளால் தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என்பதுதான் கடந்தகால புதுச்சேரி வரலாறு. சாலையை உடைத்து முதல்வருக்கு அலங்கார வளைவு தற்போது அந்த வரலாறு மீண்டும் திரும்பியிருக்கிறது. ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறும் முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி முழுவதும் அவரது ஆதரவாளர்களும், அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் பேனர்களை வைத்து வருகின்றனர். அது ஒருபுறமிருக்க, கதிர்காமம் தொகுதியின் சுயேச்சை எம்.எல்.ஏ-வான அழகாந்தம், தன்னை முதல்வர் ரங்கசாமியின் தீவிர ஆதரவாளராக காட்டிக் கொள்பவர். சமீபத்தில் அவரது எம்.எல்.ஏ அலுவலகம் திறப்பதற்காக தொகுதி முழுக்க சட்டவிரோத பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில், சாலையில் பள்ளம் தோண்டி அலங்கார வளைவு ஒன்று அமைக்கும் பணி நடைபெற்றது. அதிகாரிகள் மீது கொலைவெறித் தாக்குதல் அதுகுறித்து சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தனர். அதையடுத்து பொதுப்பணித்துறையின் மத்திய கோட்ட செயற் பொறியாளரும், வழுதாவூர் சாலை எஸ்டேட் அதிகாரியுமான சீனிவாசன் மற்றும் உதவிப் பொறியாளர் பாலாஜி தலைமையிலான அதிகாரிகள், நேற்று போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பேனர்களை அகற்றுவதற்காகச் சென்றனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், அந்த அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அதையும் மீறி அதிகாரிகள் அந்த பேனர்களை அகற்றுவதில் உறுதியாக இருந்ததால் அந்த கும்பலும், எம்.எல்.ஏவின் ஆதரவாளர்களும் அதிகாரிகள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள். தப்பித்து உயிர் பிழைத்த அதிகாரிகள் அத்துடன் அதிகாரிகளின் செல்போன்களைப் பிடுங்கிய அந்தக் கும்பல், அவர்களை கீழே தள்ளி கால்களால் எட்டி மிதித்தது. அதன்பிறகு தகவலறிந்து அங்கு போலீஸார் சென்றதால், அதிகாரிகள் உயிர் பிழைத்தனர். பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்ட அதிகாரிகள், உயிருக்கு பயந்து புகார் கொடுக்காமல் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். அடிதடி சம்பவத்திற்குப் பிறகும் நடைபெறும் அலங்கார வளைவுப் பணி இந்த சம்பவம் பொதுமக்களை மட்டுமல்ல, உயரதிகாரிகளையும் அச்சத்தில் உறைய வைத்திருக்கிறது. அதேபோல அந்த சம்பவத்தைப் பதிவு செய்யச் சென்ற செய்தியாளர்கள் மீதும் அந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்த விவகாரத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஆனாலும் அந்த அலங்கார வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பேனருக்காக தர்ணாவில் அமர்ந்த ஆளும்கட்சி எம்.எல்.ஏ அதேபோல முத்தியால்பேட்டை தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டனின் ஆதரவாளர்கள், பிரதான சாலையின் நடுவில் பள்ளம் தோண்டி, சாலையை மறித்து முதல்வர் ரங்கசாமிக்காக அலங்கார வளைவு வைத்திருக்கின்றனர். அதிகாரிகளைத் தாக்கும் ரௌடிகள் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பொதுப்பணித் துறை ஊழியர்களும், போலீஸாரும் அந்த பேனர்களை அகற்றுவதற்காகச் சென்றனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், போலீஸாரை கண்டித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை வைக்கும் அதிகாரிகள் தற்போது வரை அந்த அலங்கார வளைவையும், பேனர்களையும் அதிகாரிகளால் அகற்ற முடியவில்லை என்பதுதான் ஹைலைட். புதுச்சேரியின் இந்த பேனர் கலாசாரத்தால் பொதுமக்கள் அன்றாடம் பாதிப்புக்குள்ளாகி வருவது ஒருபுறமிருக்க, நீதிமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மாவட்ட நிர்வாகம் என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. காவல் நிலையத்தில் தர்ணாவில் அமர்ந்த எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் அதேபோல புதுச்சேரியில் பேனர்களால் நிலவி வரும் இந்த அசாதாரண சூழலுக்கு, ஆட்சியாளர்களே காரணமாக இருப்பதால் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர் அவர்களுக்கு வாக்களித்த மக்கள். அதனால் சென்னை உயர் நீதிமன்றமே இந்த விவகாரத்தில் சூமோட்டோவாக தலையிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் புதுச்சேரி அதிகாரிகள். முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் பேனர் - உயர் நீதிமன்றத்துக்கு புதுச்சேரி தலைமை நீதிபதி புகார் கடிதம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/in-puducherry-the-supporters-and-rowdies-of-mla-murderous-attack-on-pwd-officials-for-removing-banners




