முழு கட்டுரை
புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, சுகாதாரம் மற்றும் கல்வி வசதியை உருவாக்குவதற்காக, சுமார் 50 ஏக்கர் நிலத்தை ஜிப்மர் நிறுவனத்துக்கு வழங்கியிருக்கிறது மாநில அரசு. அதையடுத்து ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்திருக்கிறார் ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர்சிங் நேகி. அதன் தொடர்ச்சியாக ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், `இந்தத் திட்டத்தின் கீழ் விமான ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடிய அதிநவீன விபத்து சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை மையம் ஆகிய இரண்டு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு மையங்கள் நிறுவப்பட உள்ளன. இந்த மையங்கள் சுமார் ரூ.1,000 கோடி முதலீட்டில் அமைய இருக்கின்றன. இதன் மூலம் விலை குறைவான உயர்தர சிகிச்சை சேவைகளை விரிவுபடுத்துவதுடன், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் சுகாதார புதுமைகளும் வலுப்படும். ஆளுநர் கைலாஷ்நாதனுடன் ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர்சிங் நேகி தற்போது ஜிப்மர், புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் காயமடைந்த நோயாளிகளுக்கான முக்கிய பரிந்துரை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. சாலை விபத்துகள், தொழிற்சாலை காயங்கள், பேரிடர் அவசரநிலைகள் மற்றும் பல்வேறு சிக்கலான நிலைகள் அதிகரித்து வரும் நிலையில், தனித்துவமான விபத்து சிகிச்சை மையத்தின் தேவை அதிகரித்துள்ளது. அதனால் சுமார் ரூ.425 கோடி மதிப்பீட்டில் சேதராப்பட்டு வளாகத்தில் இந்த மையம் அமைக்கப்பட உள்ளது. இதில் 250 படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள், உயர் சார்பு சிகிச்சைப் பிரிவுகள், அவசர விபத்து சிகிச்சைப் பிரிவுகள், மறுவாழ்வு சேவைகள் மற்றும் 10 அதிநவீன அறுவை சிகிச்சைக் கூடங்கள் இடம்பெறும். இந்த மையத்தின் முக்கிய அம்சமாக ஹெலிபேடு மற்றும் விமான ஆம்புலன்ஸ் வசதி அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் அவசரநிலை நோயாளிகளை விரைவாகக் கொண்டு வந்து உயிர்காக்கும் சிகிச்சைகளை உடனடியாக வழங்க முடியும். அதேபோல விபத்து அறுவை சிகிச்சை, அவசர மருத்துவம், தீவிர சிகிச்சை, மறுவாழ்வு மருத்துவம், நரம்பியல் அறுவை சிகிச்சை, எலும்பியல், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, மனநல மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைக்கப்படும். மேலும் சுமார் ரூ.550 கோடி மதிப்பீட்டில் உருவாகவுள்ள உறுப்பு மாற்று சிகிச்சை மையம், உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சை மற்றும் மேம்பட்ட மாற்று மருத்துவ அறிவியலுக்கான முழுமையான பிராந்திய மையமாக செயல்படும். இறுதிக்கட்ட உறுப்புச் செயலிழப்பால் பாதிக்கப்படும் பல நோயாளிகளுக்கு உறுப்பு மாற்று சிகிச்சைதான் நிரந்தரத் தீர்வாக உள்ளது. அந்த சேவைகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், பலருக்கு அது கிடைப்பதில் சவால்கள் இருக்கின்றன. அதை சரிசெய்யும் வகையில், உயர்தர மற்றும் விலை குறைவான மாற்று சிகிச்சைகளை வழங்கும் வகையில் இந்த மையங்கள் வடிவமைக்கப்பட இருக்கின்றன. முதல்வர் ரங்கசாமியுடன் ஜிப்மர் இயக்குநர் 400 படுக்கைகள் கொண்ட இம்மையத்தில், சிறப்பு மாற்று சிகிச்சைப் பிரிவுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள், உயர் சார்பு சிகிச்சைப் பிரிவுகள், மேம்பட்ட நோயறிதல் வசதிகள் மற்றும் 14 அறுவை சிகிச்சை அரங்குகள் இடம்பெறும். சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல், எலும்பு மஜ்ஜை மற்றும் திசு மாற்று சிகிச்சைகளுக்கான தனிப்பிரிவுகளும் அமைக்கப்படும். இந்த மருத்துவமனை முழுமையாக செயல்படத் தொடங்கிய பின்னர், ஆண்டுதோறும் சுமார் 2,500 முதல் 2,700 உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு மையங்களும் இணைந்து சுமார் 3,000 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், நிர்வாக மற்றும் ஆதரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. `தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்!’ - மாணவர் புகார்; ஜிப்மர், புதுவை அரசுக்கு பட்டியலின ஆணையம் நோட்டீஸ்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
விரைவாகப் படிப்பதற்கான தமிழ் சுருக்கம் இது. முழு செய்தி, கூடுதல் சூழல், புதுப்பிப்புகளுக்கு அசல் வெளியீட்டாளரின் தளத்தைத் திறக்கவும்.
முழுக் கட்டுரை — கீழே உள்ள இணைப்பைப் பார்க்கவும்




