முழு கட்டுரை
சரியாக 10 நாள்களுக்கு முன்பாக (ஜூன் 10, 2026), ஈரான் - அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, ஈரான், அமெரிக்கா இரண்டும் பரஸ்பர தாக்குதலை இத்தனை நாள்களுக்கு நிறுத்தி வைத்திருந்தது. ஆனால், லெபனானை இஸ்ரேல் தாக்கியதையடுத்து கடந்த 20-ம் தேதி ஹார்முஸ் நீர்ச் சந்தியை மீண்டும் மூடியது ஈரான். தங்களின் அனுமதி இல்லாமல் ஹார்முஸில் போக்குவரத்து இருக்கக்கூடாது. மீறினால், கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று வேறு எச்சரிக்கப்பட்டிருந்தது. ஹார்முஸ் நீர்ச்சந்தி இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை (ஜூன் 25, 2026), கிட்டத்தட்ட 21 கப்பல்கள் ஹார்முஸை அனுமதி இல்லாமல் கடந்தன என்று Kpler (கப்பல் போக்குவரத்துக்கான வலைதளம்) கூறுகிறது. அப்படி, ஹார்முஸ் நீர்ச் சந்தியை அனுமதி இல்லாமல் கடக்க முயன்ற சிங்கப்பூர் கொடி ஏந்திய கப்பல் மீது நேற்று (ஜூன் 26, 2026) தாக்குதல் நடத்தியிருக்கிறது ஈரான். இதற்கு பதிலடியாக, ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது அமெரிக்கா. இது குறித்து அமெரிக்க ராணுவத்தின் ஒரு பிரிவான அமெரிக்க மத்திய கட்டளையகம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது... "நேற்று ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியே சென்று கொண்டிருந்த ஒரு வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்க மத்திய கட்டளையக (CENTCOM) படைகள் ஜூன் 26 அன்று ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தின. வணிகக் கப்பல்கள் மீது ஈரான் படைகள் நடத்திய இந்த அத்துமீறிய தாக்குதலானது, போர்நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறியுள்ளது. அதுமட்டுமின்றி, மிக முக்கியமான சர்வதேச வர்த்தகப் பாதையான இப்பகுதியில் வணிகப் போக்குவரத்து அதிகரித்துவரும் வேளையில், ஈரானின் இத்தகைய ஆபத்தான நடவடிக்கை கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தையும் சீர்குலைத்துள்ளது". ஈரானின் இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாகச் சென்று கொண்டிருந்த கப்பல்களைக் குறிவைத்து, ஈரான் இஸ்லாமியக் குடியரசு ஒரே வழியில் சென்று தாக்கும் குறைந்தது நான்கு டிரோன்களை ஏவித் தாக்கியுள்ளது. இதில் ஒரு டிரோன், மிகப்பெரிய மற்றும் மிக அதிக மதிப்புமிக்க சரக்குக் கப்பல் ஒன்றின் மேல் தளத்தை பலமாகத் தாக்கியுள்ளது. இதனால் கப்பலுக்குச் சேதம் ஏற்பட்ட போதிலும், அது தொடர்ந்து தனது பயணத்தைத் தொடர முடிந்தது. மற்ற மூன்று டிரோன்களை எங்கள் படைகள் சுட்டு வீழ்த்திவிட்டன. மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், இது இருதரப்புக்கும் இடையே இருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஒரு முட்டாள்தனமான செயலாகும்" என்று பதிவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
விரைவாகப் படிப்பதற்கான தமிழ் சுருக்கம் இது. முழு செய்தி, கூடுதல் சூழல், புதுப்பிப்புகளுக்கு அசல் வெளியீட்டாளரின் தளத்தைத் திறக்கவும்.
முழுக் கட்டுரை — கீழே உள்ள இணைப்பைப் பார்க்கவும்



