பகவான் கிருஷ்ணரின் அவதார தினமான கிருஷ்ண ஜெயந்தி, நாடு முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை, நாம சங்கீர்த்தனங்கள், சிறப்பு ஆரத்தி என காலை முதல் இரவு வரை வழிபாடுகள் நடைபெற்றன. மேலும், கிருஷ்ண ஜெயந்தி விழாவின் ஒரு பகுதியாக பெருமாள் மற்றும் கிருஷ்ணர் கோவில்களில் உறியடி உற்சவம் நடத்தப்பட்டது. கண்ணனின் பாலபருவ லீலைகளை நினைவுகூரும் வகையில், அதாவது, கோபியர்களின் வீடுகளில் கண்ணன் வெண்ணெய் திருடி உண்டதை நினைவுகூரும் வகையில் இந்த உற்சவம் நடத்தப்படுகிறது. உறியடி திருவிழாவில் மனித பிரமிடு (இடம்: மும்பை) உறியடி உற்சவம் விழாவின் இரண்டாம் நாளான இன்று பெரும்பாலான இடங்களில் உறியடி உற்சவம் நடைபெற்றது. குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் உறியடி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. உயரமான கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் பானையில் வெண்ணெய், பால், மஞ்சள் நீர் அல்லது பரிசுப் பொருட்கள் நிரப்பப்பட்டிருந்தன. இளைஞர்கள் பிரமாண்டமான மனித கோபுரம் அமைத்து, உயரே சென்று அந்த பானையை தாக்கி உடைத்தனர். சில இடங்களில் கண்களைக் கட்டியும் உறியை அடித்து மகிழ்ந்தனர். ஒன்று திரண்டுள்ள மக்களின் ஆரவார முழக்கம், பானையை நெருங்க விடாமல் தண்ணீர் ஊற்றி தடுக்கும் முயற்சிகள் என பல்வேறு சவால்களை எதிர்கொண்டபடியே இளைஞர்கள் ஆர்வத்துடன் உறியை அடித்து இலக்கை அடைந்தனர். இந்நிகழ்வுகளில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டு இளைஞர்களை உற்சாகப்படுத்தினர். மனித பிரமிடு இதேபோல் ஒருசில இடங்களில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. எண்ணெய் தடவிய கம்பத்தின் உச்சியில் உள்ள பரிசை அடைய இளைஞர்கள் போட்டி போட்டு ஏறினர். இது தைரியம் மற்றும் கூட்டு முயற்சியை வளர்க்கும் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படுகிறது. உறியடி உற்சவத்தில் மனித பிரமிடு அமைப்பது கடினமானது மற்றும் ஆபத்து நிறைந்தது என்பதால் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. எனினும் பல்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். புனேயில் ஒரு பெண் உயிரிழந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/india/janmashtami-dahi-handi-celebrations-in-mumbai




