சென்னை, வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுப்படுத்தி பணிகளை முழுமைப்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழக அரசு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொது மக்களைப் பாதுகாக்க வேண்டும். ஆண்டுதோறும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டிற்கான பருவமழை முன் கூட்டியே தொடங்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பருவமழை காலத்தில் பெய்கின்ற மழையால், ஏற்படுகின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் தெருக்களில், சாலைகளில் மழைநீர் தேங்குவதும், கழிவுநீர் செல்லும் பாதைகளில் கழிவுநீர் செல்லாமல் தேங்குவதும், அடைப்புகள் ஏற்படுவதும், போக்குவரத்தில் தடை ஏற்படுவதும், நீர் நிலைகளில் உடைப்புகள் ஏற்படுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது. கடந்த காலங்களில் மழைக்காலப் பாதிப்பினால் பொது மக்கள் பணிக்கு செல்வதிலும், போக்குவரத்திலும் மிகுந்த சிரமத்தை அடைந்தார்கள். தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் அடைந்த துன்பங்கள் ஏராளம். மழைக்காலத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் மாநிலம் முழுவதும் விவசாயப் பயிர்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உட்பட்டார்கள். இப்படி மழைக்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பொது மக்களையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனாலும் இப்பிரச்சனைக்கு முழுமையான நல்ல தீர்வு எட்டப்படவில்லை என்ற குறை இருந்தது. இதனை சரி செய்ய வேண்டிய கட்டாயம் இப்போது தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது எனவே தமிழக அரசு வடகிழக்குப் பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக மழையால், இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொது மக்களையும், விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க தமிழகம் முழுவதும் தூர்வாருதல், நீர்நிலைகளை மேம்படுத்துதல், பாலம் கட்டும் பணியை விரைவுப்படுத்துதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் தமிழக அரசு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மக்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/northeast-monsoon-precautionary-measures-should-be-expedited-gk-vasan




