சென்னை, விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இது தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவன குந்தி வரையில் 340 கிலோ மீட்டர் தொலைவிற்கு எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. விவசாய விளைநிலங்கள் திருப்பூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் இருந்து கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்கப்படுகிறது. ஆனால், இருகூரிலிருந்து முத்தூர் வரையிலான 70 கிலோமீட்டர் தூரத்திற்கு விவசாய விளைநிலங்கள் வழியாக குழாய்களை பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானது. இதற்கு விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை கவனத்தில் கொள்ளாமல் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று விவசாய நிலங்களில் குழாய்பதிக்கும் பணிகள் நடந்துள்ளன. போராட்டம் இதை கண்டித்தும், இந்தப் பணிகளை கைவிடக்கோரியும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வேலம்பட்டி டோல்கேட் பகுதியில் விவசாயிகள் திரண்டு, விளை நிலங்களில் குழாய் பதிக்க அனுமதிக்க மாட்டோம், நெடுஞ்சாலை வழியாக குழாய்களை பதிக்கவேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் - தாராபுரம் பிரதான சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்படும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. வலியுறுத்தல் எனவே, விளை நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கைவிட வேண்டும்.நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்கும் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு எடுக்க வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/bharat-petroleum-corporation-should-abandon-the-plan-to-lay-pipelines-through-agricultural-lands-communist-party-of-india-insists




