மும்பை பாந்த்ரா பகுதி எப்போதும் பிஸியாக இருக்கும். இங்கு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். பாந்த்ரா மேற்கில் உள்ள ஜிஜமாதா கார்டனுக்கு அருகிலுள்ள செயின்ட் ஜான் பாப்டிஸ்ட் சாலையில் அன்ஷ் குப்தா என்ற 8 வயது சிறுவன் சாலையைக் கடக்க முயன்றான். அப்போது 45 வயதான ஊட்டச்சத்து நிபுணர் மேகா ராவல் தனது மொபைல் போனில் பேசிய படி காரை வேகமாக ஓட்டி வந்தார். அந்தக் கார் சிறுவன் குப்தா மீது மோதி அவன் மீது ஏறி இறங்கியது. உடனே அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்த சிறுவனை மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்றனர். ஆனால் மருத்துவமனையில் சிறுவனைச் சோதித்தபோது அவன் ஏற்கனவே இறந்திருந்தான். பாந்த்ரா அருகில் உள்ள கடேஷ்வர் பகுதியில் வசித்து வந்த அன்ஷ், விளையாடுவதற்காக கார்டனுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவன் வீடு திரும்பும்போது சாலையைக் கடக்கும்போது ராவல் ஓட்டிச் சென்ற இன்னோவா ஹைக்ராஸ் எஸ்யூவி மோதியது. விபத்தை நேரில் பார்த்த ஒருவர் இது குறித்து கூறுகையில், ''விபத்தை ஏற்படுத்தியவுடன் அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டனர். உடனே விபத்தை ஏற்படுத்திய கார் சிறிது தூரத்தில் நின்றது. ஒரு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் காயமடைந்த சிறுவனை பாந்த்ராவில் உள்ள ஹோலி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்'' என்றார். பாந்த்ரா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். விபத்தை ஏற்படுத்திய ராவல் கைது செய்யப்பட்டார். தங்களது ஒரே மகனை இழந்த பெற்றோர் கதறி அழுத காட்சி நெஞ்சை உறுக்குவதாக இருந்தது. உறவினர்கள் அவர்களை ஆறுதல்படுத்த முயற்சித்தனர். பெற்றோர் அழுது கொண்டிருந்த வீடியோ ஆன்லைனில் வெளியாகி இருக்கிறது. துக்கம் மற்றும் கண்ணீருடன் பேசிய பெற்றோர், "இனி எங்களை அப்பா என்றும் அம்மா என்றும் யார் அழைப்பார்கள்? எங்களுக்கு நீதி வேண்டும், என் குழந்தை சாலையோரம் நடந்து கொண்டிருந்தபோது, கார் மோதி இறந்தான்," என்று கூறினர். அன்ஷின் தந்தை அர்விந்த் குப்தா இது குறித்து கூறுகையில், ''எங்களது மகன் இழப்பால் நாங்கள் நிலைகுலைந்து போய் இருக்கிறோம். என் மகன் அன்ஷுக்கு நடந்ததற்கு எனக்கு நீதி வேண்டும். அவன் எங்களது ஒரே குழந்தை. அவன் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளான். நான் என்ன செய்வது? எனக்கு நீதி வேண்டும்''என்று கூறினார். கோவை: அடுத்தடுத்து 20 சிலிண்டர்கள் வெடித்து விபத்து - தீக்கிரையான 50 வீடுகள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/crime/woman-talking-on-the-phone-kills-8-year-old-boy-while-driving



