கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சி பா.ஜ.க வசம் உள்ளது. மாநகராட்சி மேயராக பா.ஜ.க-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷ் பதவியில் உள்ளார். முன்னதாக, திருவனந்தபுரம் மாநகராட்சி பா.ஜ.க கவுன்சிலர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பலரும், முறைப்படி 'கடவுளின் பெயரால்' என்று உறுதிமொழி ஏற்பதற்குப் பதிலாக, தங்களுக்குப் பிடித்த கடவுள்களின் பெயர்களை நேரடியாகக் கூறியும், தியாகிகளின் பெயர்களைக் கூறியும் பதவியேற்றனர். இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், விதிகளை மீறி பதவியேற்ற பா.ஜ.க-வைச் சேர்ந்த 20 கவுன்சிலர்களின் பதவியேற்பு செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பா.ஜ.க கவுன்சிலர்கள் 19 பேர் மாநகராட்சி அலுவலகத்தில் முறைப்படி மீண்டும் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால், திருவனந்தபுரம் மாநகராட்சியின் வாழோட்டுகோணம் வார்டு பா.ஜ.க கவுன்சிலரான ஆர்.சுகதன் மட்டும் அதில் கலந்துகொண்டு பதவியேற்க முடியவில்லை. சுகதன் பல்வேறு குற்ற வழக்குகள் மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, கேரள சமூக விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டமான 'காப்பா' விதியின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சூர் விய்யூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும். மாநகராட்சிக்கு நேரில் வந்து பதவியேற்க முடியாத சூழ்நிலை நிலவியதால், சிறையில் இருந்தபடியே தான் பதவியேற்க அனுமதிக்க வேண்டும் அல்லது இதற்காகத் தற்காலிகமாகத் தன்னை பரோலில் விட வேண்டும் என்று கோரி சுகதன் தரப்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. கேரள வரலாற்றிலேயே முதன் முறையாக, குற்ற வழக்கில் கைதியாகச் சிறையில் இருக்கும் ஒரு மக்கள் பிரதிநிதி, சிறை வளாகத்திற்குள்ளேயே கவுன்சிலராகப் பதவியேற்றுக் கொண்ட அரிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு திருச்சூர் விய்யூர் மத்திய சிறையில் நடந்துள்ளது. விய்யூர் சிறையில் நடந்த பதவியேற்பு விழா இந்த மனுவை விசாரித்த நீதியரசர் பி.வி.குஞ்ஞிகிருஷ்ணன், மக்களின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் என்றும், ஜனநாயக நடைமுறைகள் எக்காரணம் கொண்டும் தடுத்து நிறுத்தப்படக் கூடாது என்றும் கூறியதுடன், கடுமையான 'காப்பா' சட்டம் சுமத்தப்பட்டுள்ளதால் மனுதாரரை இப்போது வெளியில் நடமாட விட முடியாது என்றும், அதே சமயம் மக்களின் தீர்ப்பு பாழாகாமல் இருக்க அசாத்தியமான சூழ்நிலைகளில் அசாத்தியமான முடிவுகள் தேவைப்படுகின்றன என்றும் கூறி, சுகதனை சிறையிலேயே பதவியேற்க வைக்க நீதிமன்றம் அதிரடி அனுமதி அளித்தது. சிறையில் பதவியேற்ற பா.ஜ.க கவுன்சிலர் ஆர்.சுகதன் நீதிமன்ற உத்தரவின்படி, திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் வி.வி.ராஜேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று திருச்சூரில் உள்ள விய்யூர் மத்திய சிறைக்குச் சென்றனர். அங்கு சிறை வளாகத்தில் உள்ள நூலக அரங்கில் இதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில், ஆர். சுகதன் கடவுளின் பெயரால் உறுதிமொழி கூறி கவுன்சிலராகப் பதவியேற்றுக் கொண்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி, சிறைக் கைதியாக இருந்துகொண்டு சிறை வளாகத்திற்குள் பதவியேற்பது கேரள அரசியல் மற்றும் சட்ட வரலாற்றில் இதுவே முதன் முறையாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/bjp-councillor-takes-oath-in-prison-in-kerala




