சென்னை, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பிறகு ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வை கட்டாயமாக்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் குறைந்தபட்ச மதிப்பெண்களை 55 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாககவும், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான பிரிவில் குறைந்தபட்ச மதிப்பெண்களை 45 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாககவும், குறைத்து கடந்த ஜனவரி மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதேபோல பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 60 சதவீதத்திலிருந்து 50 சதவிதமாக குறைக்கக் கோரி 2010-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட பொதுப் பிரிவை சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், "பீகார் மாநிலத்தில் பொதுப் பிரினருக்கு 50 சதவீதமாக குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது போல தமிழகத்திலும் குறைத்து நிர்ணயிக்க வேண்டும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவு ஆசிரியர்களுக்கு 50 சதவீத மதிபெண்கள் மட்டுமே நிர்ணயித்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்கவில்லை. எனவே குறைந்தபட்ச மதிப்பெண்களை 50 சதவீதமாக குறைப்பது தொடர்பாக பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களை குறைப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த கொள்கை முடிவை நீதிமன்றத்தில் தெரிவிக்க ஏதுவாக வழக்கு விசாரணையை ஜூலை 24-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-high-court-orders-interim-stay-on-publishing-results-of-teacher-eligibility-test




