மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி முதல்வராக இருந்தபோது துணை சபாநாயகராக பணியாற்றியவர் ஆசிஷ் பானர்ஜி. ராம்பூர்ஹாட்டில் இருந்து ஐந்து முறை எம்எல்ஏ-வாக இருந்தவர். கடந்த முறை நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவினார். அவர் ராம்பூர்ஹாட்டில் உள்ள ஹட்டலபாரா பகுதியில் வசித்து வந்தார். இன்று காலை அவரது வீட்டிற்கு அடுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தில் பானர்ஜி இறந்து கிடந்தார். ஜன்னல் வழியாக அவர் இறந்து கிடந்ததை உள்ளூர் மக்கள் பார்த்து இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்த தகவல் கிடைத்ததும், திரளான மக்கள் கட்சி அலுவலகத்தில் குவிந்தனர். அவரது இறப்பு குறித்த தகவல் கிடைத்ததும் போலீஸார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எழுதி வைத்த கடிதம் ஒன்றும் போலீஸாரிடம் கிடைத்து இருக்கிறது. தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்தனரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மம்தா பானர்ஜி முதல் முறையாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆசிஷ் பானர்ஜி கல்வி மற்றும் விவசாய அமைச்சராக பணியாற்றினார். அதோடு திரிணாமுல் காங்கிரஸ் தொடங்கப்பட்டதில் இருந்து மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். அவர் நேற்று இரவில் கூட கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்களை கட்சி அலுவலகத்தில் சந்தித்து பேசியதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். அவர் தேர்தல் தோல்விக்கு பிறகு தீவிர அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தார். ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கிய பானர்ஜி 2001ம் ஆண்டு முதல் முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/trending/former-deputy-speaker-commits-suicide-at-trinamool-congress-office-in-west-bengal




