சென்னை, கொரோனா கட்டுப்பாட்டை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட இரண்டு வழக்குகளை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சேலம் டவுன் காவல் நிலையத்துக்குட்பட்ட, நாட்டாண்மை கட்டிடம் முன்பு கொரோனா கட்டுப்பாடுகளை மீறி, மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தாத தமிழக அரசைக் கண்டித்து, சாலையை வழிமறித்து, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதி பெறாமல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சேலம் டவுன் போலீசார் கடந்த 2021-ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சியின் முன்னாள் இந்நாள் எம்எல்ஏக்கள், எம்.பிக்களுக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி, சேலம் டவுன் காவல் நிலையத்துக்குட்பட்ட கோட்டை மைதானத்தில் சாலையை வழிமறித்து, பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், கொரோனா கட்டுப்பாடுகளை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி, அரசியல்வாதிகளுக்கு போராட்டம் நடத்த உரிமை உண்டு எனக்கூறி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இரு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார். இதேபோல, தேர்தல் விதிமீறல் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தாக்கல் செய்திருந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அவர் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/cases-against-edappadi-palaniswami-dropped




