சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு `வெல்வோம் இருநூறு படைப்போம் வரலாறு' என்ற முழக்கத்தை முன் வைத்தது திமுக தலைமை. 200 தொகுதிகளில் வெற்றி பெற்றி திமுக ஆட்சியை தக்க வைக்கும் என அப்போதைய முதல்வர் ஸ்டாலின் உறுதியாக சொன்னார். ஆனால் தேர்தல் முடிவுகள் திமுக-வினர் நினைத்தது போல், பேசியது போல் அமையவில்லை. வலுவான இயக்கமாக திமுக-வை வீழ்த்தி தவெக ஆட்சி அமைத்தது. இதையடுத்து தோல்விக்கான காரணத்தை கண்டறிய குழு அமைத்தது திமுக. திமுக நிர்வாகி வைத்த ஃப்ளக்ஸ் இதையடுத்து குழுவைச் சேர்ந்தவர்கள் தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி தோல்விக்கான காரணத்தை தலைமையில் சமர்பித்தனர். இதையடுத்து திமுக-வில் மாற்றங்கள் வரப்போவதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக சீனியர்களுக்கான முக்கியத்துவத்தை குறைத்து விட்டு இளைஞர்களுக்கு கட்சி பதவிகளில் அதிக வாய்ப்புகள் வழங்கப்போவதாக பேசப்பட்டது. அதே நேரத்தில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமிக்க போவதாக சொல்லப்படுகிறது. அதன்படி மொத்தம் 117 தொகுதிகளுக்கு ஏற்கனவே இருப்பவர்களையும் சேர்த்து மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கபட இருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு வெளியாகும் என திமுக வட்டத்தில் சொல்கிறார்கள். இந்தசூழலில் தான் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கிளை கழக நிர்வாகி ஒருவர் எங்கள் தளபதியே இளம் வயதினருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று ப்ளக்ஸ் வைத்திருப்பது கவனம் பெற்றுள்ளது. நீடமாங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.வி.கே.ஆனந்த் இல்ல விழா நேற்று மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் திமுக-வினரை வரவேற்கும் விதமாக அந்த ஃப்ளக்ஸ் வைக்கப்பட்டது என்கிறார்கள். மன்னார்குடி இதுகுறித்து விபரம் அறிந்த திமுக தரப்பினரிடம் பேசினோம், `திமுக-வில் சீனியர்கள் ஆதிக்கம் தேர்தல் தோல்விக்கு பிறகும் குறையவில்லை. இளைஞர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியவர்கள் செயல்பட விடாமல் தடுப்பதாக தோல்விக்கான காரணம் அறியும் குழுவிடம் பல இடங்களில் குமுறினர். சில தினங்களுக்கு முன்பு சட்டமன்றத் கூட்டம் முடிந்ததும் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அதற்கு முன்பு திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் உள்ளிட்ட சில எம்.எல்.ஏக்கள் அங்கு நின்றனர். அப்போது துரை.சந்திரசேகரன், எத்தனை நாளுக்குத்தான் சேகர் பாபுவே முன்னாடி நிற்பார் என்பார் உடனே மீடியா மைக் உள்ளது என அருகில் இருந்தவர்கள் சொன்னதும் சந்திரசேகரன் அமைதியாகி விட்டார். சந்திரசேகரனே சீனியர் தான். தொடர்ந்து அவருக்கு திருவையாறு தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கே சேகர்பாபு போன்ற சீனியர்கள் தடையாக இருப்பதை உணர்த்துவதாக அவரது பேச்சு இருந்தது. அதனால் தான் தன் மனக்குமுறைலை பொதுஇடத்தில் வெளிப்படுத்தியுள்ளார். மன்னார்குடியில் திமுக நிர்வாகி வைத்த ஃப்ளக்ஸ் திமுக-வில் எத்தனையோ இளைஞர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். இதே போல் நிர்வாகிகளாக இருப்பவர்களையும் சீனியர்கள் சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை. இவற்றையெல்லாம திமுக தலைமை களைய வேண்டும். திருவாரூர் மாவட்ட செயலாளராக பூண்டி கலைவாணன் இருக்கிறார். தற்போது இரண்டு தொகுதிகளாக பிரித்தால் திருவாரூர், நன்னிலம் தொகுதிகளின் மாவட்ட செயலாளராக கலைவாணன் இருப்பார். மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய இரு தொகுதிகளை உள்ளடக்கி மாவட்ட செயலாளர் நியமிக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவிய டி.ஆர்பி.ராஜாவுக்கு மாவட்டச் செயலாளர் பதவியில் பெரிதாக நாட்டமில்லை என்கிறார்கள். இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர் இளையராஜா திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மாவட்டச் செயலாளராக வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் தான் எங்கள் தளபதியே இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என ஸ்டாலினுக்கு கோரிக்கை வைப்பது போல் நிர்வாகி ஃப்ளக்ஸ் வைத்துள்ளார். நல்ல செயல்படக் கூடிய இளைஞர்களில் ஒருவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்க வேண்டும். அப்போது தான் கட்சி வளர்ச்சிக்கு நல்லது. வரும் தேர்தல்களில் வெற்றி பெற முடியும்" என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/dmk-party-persom-flex-intimation-to-stalin



