மதுரை பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் நிறைவேறாத கடைசி ஆசை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. பட்டிமன்ற நடுவர் மற்றும் தமிழ் அறிஞரான சாலமன் பாப்பையா வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 90. சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக பட்டிமன்றத்தில் நடுவராக கலந்து கொண்டு பேசினார். அதன்பின் வீட்டில் இருந்த அவருக்கு திடீரென மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். மக்களின் அஞ்சலிக்காக சாலமன் பாப்பையா உடல் ஞானஒளிவுபுரம் பகுதியில் உள்ள அவருடைய வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. உயில் அவருக்கு நிறைவேறாத ஆசை இருந்துள்ளது. இதுபற்றி சாலமன் பாப்பையாவின் உதவியாளர் ராஜா கூறுகையில், சாலமன் பாப்பையா கிறிஸ்தவராக பிறந்தாலும், சாதி, மத வேறுபாடுகளை கடந்து வாழ்ந்தவர். தனது உடலை தகனம் செய்ய வேண்டும் என அவர் உயில் எழுதி வைத்துள்ளார். அதன்படி, மதுரை தத்தனேரி மின்மயானத்தில் தகனம் நடைபெறும் வகையில் ஏற்பாடு நடந்து வருகிறது. பாரதியார் குறித்த புத்தகத்தை வெளியிட வேண்டும் என நினைத்தார். அது தான் அவரது கடைசி ஆசையாகவும் இருந்தது. அந்த ஆசை நிறைவேறும் முன்பு மறைந்து விட்டார் என கூறினார். பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் சொந்த ஊர், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி. 22.2.1936 அன்று பிறந்தவர். தமிழில் முதுகலை பட்டம் பெற்ற அவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றினார். பட்டிமன்றங்களில் பேச்சாளராக கலந்து கொண்டு பேசிய அவர், பின்னாளில் நடுவராகவும் உயர்ந்ததுடன், சிவாஜி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். பிரபலங்கள் இரங்கல் அவர் இலக்கியக்கட்டுரைகள், திறனாய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். திருக்குறள், புறநானூறு, அகநானூறு இலக்கியங்களுக்கு உரையும், கம்பன் கழக சொற்பொழிவுகளை நூலாகவும் தொகுத்தவர். தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டுக்காக 2000-ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார். 2021-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். சாலமன் பாப்பையா மறைவுக்கு தமிழ் அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவரது இறுதிச்சடங்குகள் இன்று (சனிக்கிழமை) பகல் 11 மணிக்கு மேல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/pattimandram-naduvar-salomon-pappaiyaavin-niraiveraatha-kadaisi-aasai




