சென்னை, சென்னையில் 608 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை அமைச்சர் வெங்கடரமணன் வழங்கினார். மின்னணு குடும்ப அட்டைகள் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- கண்ணதாசன் நகர், கொடுங்கையூரில் உள்ள எஸ்.கே. மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் பெரம்பூர் பகுதிக்குட்பட்ட 300 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, தண்டையார்பேட்டை, பெருநகர சென்னை மாநகராட்சி நெய்தல் திருமண மாளிகைளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.கே.நகர், இராயபுரம் மற்றும் திருவெற்றியூர் பகுதிகளுக்குட்பட்ட 308 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கி, அரசின் மக்கள் நலத் திட்டங்கள் அனைவரையும் விரைவாகச் சென்றடைய வேண்டும் என்ற அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், பொதுமக்கள் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தங்களுக்குத் தேவையான பொருட்களை முறையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். மானிய விலையில் மேலும், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலை மற்றும் தனியார் அரிசி அரவை ஆலையிலிருந்து அரிசியாக பெறப்படுகிறது. மேலும், சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வியாபாரிகளிடமிருந்து வெளிச்சந்தை விலையில் பெறப்பட்டு, தரப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, விலையில்லா மற்றும் மானிய விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன என்பதையும் விளக்கமாக எடுத்துரைத்தார். ரசீது மேலும், நியாய விலைக்கடைகளில் பொருட்களை வாங்கும் ஒவ்வொரு முறையும் கட்டாயமாக ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதுடன், பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் வெளிச்சந்தைக்கு முறைகேடாக விற்கப்படுவதை பொதுமக்களின் பங்களிப்புடன் திறம்பட தடுக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளில் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/minister-venkataramanan-issued-new-electronic-ration-cards-to-608-beneficiaries-in-chennai




