தூத்துக்குடி, தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் அருகே திருவள்ளூர்புரம் பகுதியில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேரின் வீடுகள் எரிந்து முழுமையாக சேதமடைந்தன. குடியிருப்பு பகுதியில் தீ விபத்து தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட லூர்தம்மாள்புரம் அருகேயுள்ள திருவள்ளூர்புரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் பல வீடுகள் ஆஸ்பெஸ்டாஸ் சீட் மூலம் மேற்கூறை அமைக்கப்பட்டவை ஆகும். இந்த நிலையில் இதன் அருகே உள்ள கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் உள்ள குப்பைகளுக்கு சிலர் தீ வைத்துள்ளனர். அப்போது வீசிய பலத்த காற்று காரணமாக தீ கட்டுக்கடங்காமல் பரவி, அருகே இருந்த குடியிருப்பு வீடுகளில் பற்றியது. 5 பேரின் வீடுகள் எரிந்து சேதம் இந்த தீ விபத்தில் கருப்பசாமி, ஆறுமுககனி, மேரி, ராமலட்சுமி, மடோனா ஆகிய 5 பேரின் வீடுகள் தீப்பற்றி எரிந்தன. அவர்களுடைய வீடுகளில் இருந்த பீரோ, கட்டில், மிக்ஸி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகின. மேலும் இந்த விபத்தின் தீவிரத்தால் ஒரு வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளை பயங்கர சத்தத்துடன் வெடித்தது. போலீசார் விசாரணை இதுகுறித்த தகவலின்பேரில், தூத்துக்குடி தீயணைப்புத் துறையினர் 4 வாகனங்களில் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த கோர விபத்து குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குப்பைக்கு தீ வைத்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/massive-fire-in-thoothukudi-5-houses-burnt-down




