சென்னை, சென்னையில் போலி இணையதளம் மூலம் ரூ.23 லட்சம் மோசடி செய்த பெண் வங்கி ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். அதிக வட்டிக்கு முதலீடு சென்னையை சேர்ந்த ஹேமா பிரியதர்ஷினி (வயது 40) என்பவருக்கு, கடந்த 2024-ம் ஆண்டு அவரது உறவினர் மூலம் பூஜா ஜெயின்(வயது 39) என்ற பெண் அறிமுகமானார். தனியார் வங்கிகளில் ரிலேஷன்ஷிப் மேனேஜராக பணியாற்றி வந்த பூஜா ஜெயின், 'ஐ.பி.எல். பண்ட்' என்ற திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தால் 30 சதவீதம் அதிக வட்டி கிடைக்கும் என்று பிரியதர்ஷினியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி ரூ.15 லட்சம் பணத்தை ஹேமா பிரியதர்ஷினி முதலீடு செய்தார். அந்த பணத்திற்கு வட்டி தொகையும் கிடைத்துள்ளது. சில மாதங்களுக்குப் பிறகு, மேலும் பணத்தை முதலீடு செய்யுமாறு ஹேமா பிரியதர்ஷினியிடம் பூஜா ஜெயின் வற்புறுத்தியுள்ளார். இதையடுத்து கடந்த 2025-ம் ஆண்டு ஆண்டு மார்ச் மாதம் ரூ.8 லட்சம் பணத்தை ஹேமா முதலீடு செய்தார். ஆனால் இந்த முறை வட்டி பணம் எதுவும் அவருக்கு வரவில்லை. மோசடி இது குறித்து விசாரித்தபோது, சம்பந்தப்பட்ட நிறுவனம் நஷ்டமடைந்துவிட்டதாக பூஜா ஜெயின் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஹேமா, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சென்னை மேற்கு மண்டல சைபர்கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பூஜா ஜெயின் தனியார் வங்கியில் பணியாற்றிய அனுபவத்தை பயன்படுத்தி, வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்களை சேகரித்துள்ளார். பின்னர், 'இந்தியா பாண்ட்ஸ் லிமிடெட்' என்ற பெயரில் ஒரு போலி இணையதளத்தைத் தொடங்கியதோடு, முதலீட்டாளர்களை நம்ப வைக்க "ஐ.பி.எல். அன்ட் கோ" என்ற பெயரில் போலியாக நடப்புக் கணக்கையும் தொடங்கியுள்ளார். முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்படும் பணத்தை அந்த கணக்கில் பெற்றுக்கொண்டு, பின்னர் அதனை தனது சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார் என்பது தெரியவந்தது. கைது இதையடுத்து, சென்னை பார்க் டவுன், மின்ட் தெருவைச் சேர்ந்த பூஜா ஜெயினை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்தப் பட்ட 2 செல்போன்கள் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதான பூஜா ஜெயின் மீது ஏற்கனவே நுங்கம்பாக்கம், கொளத்தூர் காவல் நிலையங்கள் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-23-lakh-fraud-via-fake-website-female-bank-employee-arrested




