ராமநாதபுரம், திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி-அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் உள்ளது. பாண்டிய நாட்டு ஸ்தலங்களில் ஒன்றாகவும் தேவார பாடல் பெற்ற ஸ்தலமாகவும் விளங்கும் இக்கோவிலில் ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் மாலையில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களின் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ஆதிரெத்தினேஸ்வரர்-சினேகவல்லி அம்மன் திருக்கல்யாண வைபவம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி காலையில் ஆதிரெத்தினேஸ்வரர் பிரியாவிடை மற்றும் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருடன் ஆலயத்திலிருந்து நூற்றுக்கால் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த மணமேடைக்கு எழுந்தருளினர். சினேகவல்லியம்மன் ஆலயத்திலிருந்து தவசு மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சப்த கன்னிமார் பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. திருக்கல்யாணம் பின்னர் சினேகவல்லியம்மன் சிறப்பு அலங்காரத்தில் மணமேடைக்கு எழுந்தருளினார். அதன்பின் சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்விகள் நடைபெற்றது. சுவாமி, அம்பாளுக்கு காப்பு கட்டுதல், வஸ்திரம் சாற்றுதல், பூணூல் அணிவித்தல், மாலை அணிவித்தல் போன்ற சடங்குகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க சுவாமியின் கையில் இருந்த தங்க தாலியை சிவாச்சாரியார்கள் அம்மனின் கழுத்தில் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். பின்னர் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு விபூதி குங்குமம் மஞ்சள், மஞ்சள் கயிறு, பூக்கள் இனிப்பு உள்ளிட்ட அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. திருமண கோலத்தில் அருள்பாலித்த சுவாமி-அம்பாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு ஆலயத்தில் திருக்கல்யாண விருந்து நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள், விருந்து சாப்பிட்டு மொய் எழுதி சென்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/devotional/thiruvadanai-adhirathineswarar-temple-aadi-pooram-festival-thirukalyanam




