சென்னை சேலையூர், ஜானகிராமன் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (44). இவர் மீது சேலையூர் போலீஸார் குட்கா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பாலாஜியின் கூட்டாளியான ராமநாதன் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்களிடமிருந்து மொத்தம் 506 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக சிறை காவலர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பாலாஜியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். குட்கா வழக்கில் கைதான பாலாஜி, ராமநாதன் இதையடுத்து பாலாஜி உயிரிழந்த தகவல் அவரின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாலாஜியின் குடும்பத்தினரும் உறவினர்களும் பாலாஜியை சிறைக்காவலர்கள் அடித்தே கொன்று விட்டதாக குற்றம் சாட்டினர். பாலாஜியின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை அவரின் சடலத்தை வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்தனர். இந்த நிலையில் பாலாஜியின் மரணத்துக்கு நீதி கேட்டு சேலையூர் காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர். அதனால் சேலையூர் காவல் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த முற்றுகை போராட்டத்தால் தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சேலையூர் போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன் தலைமையிலான போலீஸார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. பாலாஜியின் பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் பாலாஜியின் உறவினர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/crime/prisoner-dies-in-jail-family-besieges-police-station




