நகரி, நள்ளிரவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் தெலுங்கு நடிகர் தர்மா மகேஷ், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பிலிம் நகர் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 'சிந்தூரம்', 'டிரிங்கர் சாயி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, நடிகர் தர்மா மகேஷின் வீட்டின் நுழைவாயில் இரும்பு கதவை உடைத்துக்கொண்டு வளாகத்திற்குள் புகுந்தது. இந்த திடீர் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிர் தப்பிய குடும்பத்தினர் இந்த விபத்தில் வீட்டின் நுழைவாயில், இரும்பு கதவு மற்றும் சுற்றுச்சுவர் கடுமையாக சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக, அப்போது வீட்டில் இருந்த தர்மா மகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. வாலிபர்களிடம் போலீஸ் விசாரணை சம்பவம் குறித்து தகவல் அறிந்த பிலிம் நகர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, விபத்துக்குள்ளான காரில் இருந்த சில இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விபத்துக்கான காரணம் குறித்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. காரில் இருந்தவர்கள் மதுபோதையில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதால் இந்த விபத்து நடந்ததா அல்லது நடிகர் தர்மா மகேஷை குறிவைத்து முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். விசாரணைக்குப் பிறகே சம்பவத்தின் உண்மையான பின்னணி தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/cinema/cinemanews/car-crashes-into-actor-dharma-maheshs-house-police-investigating-from-multiple-angles




