உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் செளகான் என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சரக்கு கப்பல் வேலைக்காக வெனிசுலா சென்றார். ஆனால் கடந்த மே மாத தொடக்கத்தில், அவர் வேலைக்கு சென்ற கம்பெனி நிர்வாகம் செளகான் குடும்பத்திற்கு போன் செய்து செளகான் கப்பலில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக தெரிவித்தனர். அடுத்த நாள் அவர் 95 சதவீதம் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்று கூறினர். அதன் பிறகு அவர் இறந்துவிட்டதாகவும், உடலை ஒரு வாரத்தில் கொண்டு வந்து கொடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் ஒரு வாரம் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் கழித்த பிறகுதான் செளகான் உடல் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. செளகான் உடலை தியோரியா டாக்டர்கள் போலீஸார் முன்னிலையில் பிரேத பரிசோதனைக்காக சோதனை செய்தபோது அந்த உடல் ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் முழுக்க தையல் போடப்பட்டு இருந்தது. இதையடுத்து முறைப்படியான உத்தரவு இல்லாமல் தங்களால் பிரேத பரிசோதனை செய்ய முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். செளகான் மனைவி எனவே கோர்ட் உத்தரவு மூலம் டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். ஆனால் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சியளிக்கும் விதமாக செளகான் உடம்பில் இருதயம், மூளை, நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் உட்பட உடலில் எந்த உறுப்பும் இல்லை. அனைத்தும் மாயமாகி இருந்தது. இதனால் செளகான் எப்படி இறந்தார் என்பதை டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து செளகான் இறந்தது எப்படி என்பது குறித்து மத்திய அரசு வெனிசுலாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் முழுமையாக விசாரணை நடத்தவேண்டும் என்று இந்திய மாலுமிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மாலுமிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''உடலில் ஏற்கனவே விரிவான தையல்கள் காணப்பட்டன (கழுத்து முதல் அந்தரங்க எலும்பு இணைப்பு வரை 22 தையல்கள் + காதுக்குக் காது 21 தையல்கள்). இறப்பதற்கு முந்தைய காயங்கள் எதுவும் காணப்படவில்லை. உடல் ஏறக்குறைய ஒரு மாதம் வரை ஆழ்-உறைநிலையில் வைக்கப்பட்டிருந்தது. உடலில் எந்த உறுப்பும் இல்லாததால் இறப்புக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. மாலுமிகள் பலிகடாக்களாக மாறுகிறார்கள். வெனிசுலா அதிகாரிகளிடம் இருந்து முழு விசாரணை அறிக்கையை பெறவேண்டும். வெனிசுலாவில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாக தலையிட்டு முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை, இறப்பு சூழ்நிலைகள் மற்றும் நீதி, குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. செளகானின் தந்தை ராம்தேவ் இது குறித்து கூறுகையில்,''எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆரம்பக்கட்ட பிரேத பரிசோதனை ஏற்கனவே நடத்தப்பட்டிருந்தது. ஆனால் மாவட்ட நீதிபதியின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட இரண்டாவது உடற்கூராய்வில், உடலிலிருந்து சில உள்ளுறுப்புகள் காணாமல் போனதும், இறப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்பதும் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்," என்று கூறினார். வெனிசுலா அதிகாரிகள் பிரேத பரிசோதனை அறிக்கையோ அல்லது இறந்ததற்கான காரணம் குறித்தோ எந்த வித அறிக்கையும் கொடுக்கவில்லை என்றும் செளகான் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/crime/organs-including-the-brain-and-heart-missing-from-the-body-of-a-seafarer-brought-back-from-venezuela-after-dying-on-board




