'தளபதி விஜய்தான் அடுத்த பிரதமர்' என்ற த.வெ.க அமைச்சர்களின் வாய்ப்பாட்டுக்கு, முதல்வரை நேரில் சந்தித்து வாய்ப்பூட்டு போட முயற்சித்தார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் மாணிக்கம் தாகூர். ஆனால், அதன்பிறகும் த.வெ.க எம்.எல்.ஏ கனிமொழி, "பிரதமர் வேட்பாளர் விஜய்தான். 2026-ல் விஜய்யை முதல்வர் நாற்காலியில் அமரவைத்த ராகுல் காந்தியே, 2029-ல் பிரதமர் நாற்காலியிலும் அமரவைப்பார்" எனக்கூறி பரபரப்பை பற்றவைத்திருக்கிறார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையிடம் இவ்விவகாரம் குறித்த நமது கேள்விகளை முன்வைத்தோம். "கடந்த காலத்தில், 'ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதலில் அறிவித்தது தி.மு.க.'. ஆனால், இன்று உங்கள் கூட்டணிக் கட்சியான த.வெ.க தலைவர்களே 'விஜய்தான் பிரதமர் வேட்பாளர்' என்கிறார்களே?" "ஆமாம். கடந்த 2018-ம் ஆண்டு அண்ணா அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணா, கலைஞர் சிலைகள் திறப்பு விழா நடைபெற்றது. சோனியா காந்தி கலந்துகொள்ளவிருந்த அந்த கூட்டத்துக்கு ராகுல் காந்தியையும் சர்ப்ரைஸாக வரவழைத்த மு.க.ஸ்டாலின், அதே மேடையில் 'எங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்' என முன்மொழிந்தார். சந்திரபாபு நாயுடு, சரத் பவார், உத்தவ் தாக்கரே, மமதா பானர்ஜி, லல்லு பிரசாத் யாதவ், கெஜ்ரிவால் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் யாருமே 'ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்' என எங்கள் தலைவர் பெயரை முன்மொழியாத சூழலிலும் தானே முன்வந்து அறிவித்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். செல்வப்பெருந்தகை அப்போது சந்திர பாபு நாயுடு உள்ளிட்ட சில தலைவர்கள், 'அவசரப்பட்டுட்டீங்களே. நம்மில் யாராவது ஒருவர்கூட பிரதமர் வேட்பாளராக வந்திருக்கலாமே.' என எதிர்ப்பு தெரிவித்ததாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதெல்லாம் கடந்தகால வரலாறு." "ஆனால், தி.மு.க கூட்டணியிலும்கூட காங்கிரஸாருக்கு உரசல் போக்கு இருந்ததுதானே?" "கடந்தகாலத்தில், தி.மு.க கூட்டணியில் இருந்தபோது அங்கேயிருந்த மூத்த அமைச்சர்களான கே.என்.நேரு, எ.வ.வேலு, பெரியசாமி உள்ளிட்டோர் 'எங்க தளபதியும் பிரதமர் வேட்பாளர்தான்' என்று எந்தவொரு இடத்திலும் சொல்லவில்லையே. எல்லோருமே அவ்வளவு கட்டுக்கோப்போடும் உண்மையான நட்போடும் இருந்தார்கள். குறிப்பாக தி.மு.க தலைவர், அன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 'ராகுலகாந்தியை பிரதமர் ஆக்கவேண்டும்' என்று மானசீகமாக முனைப்பெடுத்து எத்தனையோ கூட்டங்கள், பிரசார வியூகங்கள் என மிகக்கடுமையாக உழைத்தார். 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போதும், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி மிகக்கடுமையான தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து தமிழ்நாடு, புதுச்சேரியில் 40-க்கு 40 என்ற அளவில் வெற்றி வாகையை சூடியது தி.மு.க தலைமையிலான கூட்டணி. ஸ்டாலின் - ராகுல் காந்தி இதுபோன்றதொரு வெற்றியை, காங்கிரஸ் ஆண்டு கொண்டிருக்கும் தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பெற்றிருந்தால் அப்போதே ராகுல் காந்தி பிரதமர் ஆகியிருப்பார். ஆனால், மு.க.ஸ்டாலின் அர்ப்பணிப்புடன் செய்த பணியை காங்கிரஸ் கட்சி செய்யத் தவறிவிட்டதோ என்ற வேதனையும் உள்ளுக்குள் இருக்கிறது. ஏனெனில், கூடுதலாக ஒரு 25 எம்.பி-க்கள் கிடைத்திருந்தால்கூட காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஆட்சி மத்தியில் பொறுப்பேற்றிருக்கும். தமிழக காங்கிரஸ் தலைவராக நானும் உடனிருந்து பார்த்ததால் இதையெல்லாம் சொல்கிறேன். அப்படியெல்லாம் காங்கிரஸுக்காக உழைத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நாங்கள் விசுவாசமாக இல்லையோ என்ற வருத்தம் எனக்கு இப்போதும் இருக்கிறது." "தி.மு.க உடனான ஆழமான நட்புக் கூட்டணிதான் 2024 தேர்தலில், மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது என நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடோ யாத்திரை'தான் வெற்றிக்குக் காரணம் என தாரகை கத்பர்ட் சொல்கிறாரே. இரண்டில் எது உண்மை?" "காங்கிரஸ் ஆளுங்கட்சியாக உள்ள கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களிலும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரை நடைபெற்றது. ஆனாலும் அங்கேயெல்லாம் இதுபோல் பெரிய வெற்றியை காங்கிரஸ் பெறவில்லையே.' என தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சட்டமன்றத்திலேயே தாரகை கத்பர்ட்டின் கருத்துக்குபதில் சொல்லிவிட்டாரே. அதுதானே உண்மை." "த.வெ.க-வினரின் பேச்சைக் கண்டிக்கும் காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார்கூட, 'அமைச்சரவையிலிருந்து விலகுவோம்' என்றுதான் கூறுகிறாரே தவிர. 'த.வெ.க-வுக்கான ஆதரவை விலக்குவோம்' என கூறவில்லையே?" "அமைச்சரவையிலிருந்து விலகுகிறோம் என்றாலே அர்த்தம் அதுதான்!" "அப்படியென்றால், அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்த கருத்தைக்கூட மாநிலத் தலைவரான மாணிக்கம் தாகூர் தெரிவிக்கவில்லை என்கிறீர்களா?" "நான் கட்சியின் முன்னாள் மாநில தலைவர். இந்த நிலையில், இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்ததுதான் சரியான கருத்து. அது ஒட்டுமொத்த காங்கிரஸின் குரலாகத்தான் எனக்கும் தெரிகிறது. எனவேதான் அதையே நானும் வழிமொழிகிறேன். ஆனால், இவ்வளவு நடந்தபிறகும்கூட த.வெ.க தரப்பிலிருந்து இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வார்த்தைகூட வெளிவரவில்லை. கடைசியில், பேராசை பெருநட்டமாகிவிடாமல் இருந்தால் சரி." விஜய் - ராகுல் காந்தி "த.வெ.க தரப்பிலிருந்து மறுப்பு வெளிவரவில்லையே என்ற உங்களது ஆதங்கம் நியாயமானது. ஆனால், இந்த விவகாரத்தில் தமிழக காங்கிரஸ்தானே உரிய எதிர்ப்பைத் தெரிவித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்?" "நான் ஆதங்கப்படவில்லை. 1991-ல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அ.தி.மு.க-வின் ஜெயலலிதா, 1996-ல் ஆட்சிக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது. ஆக, 'தமிழக அரசியல் எப்படி இருக்கும், எதை நோக்கி நகரும்' என்ற கணக்கெல்லாம் எனக்கும் தெரியும். நட்புக்கு இலக்கணமாக இருக்கவேண்டும் என்றால், நாங்கள் தி.மு.க-வுடன்தான் தொடர்ந்து பயணித்திருக்க வேண்டும். ஆனால், 'விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்' என கட்சித் தலைமை முடிவெடுத்துவிடுகிறது. இந்த நிலையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறக்கூடாது என நாமும் சேர்ந்து பயணிக்கிறோம்." " '2026 தேர்தலில், தி.மு.க தலைவருடன் மேடையைப் பகிர்ந்துகொள்வதைத் தவிர்த்தார் ராகுலகாந்தி. இப்போது வைகோ புத்தக வெளியீட்டில் ராகுல்காந்தியுடன் மேடையேறுவதைத் தவிர்த்துவிட்டார் விஜய்' என்கிறார்களே?" "இன்னும் போகப்போக எல்லாம் தெரியும். காத்திருந்து பார்ப்போம்!" முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/government-and-politics/kselvaperunthagai-interview-on-dmk-tvk-alliance




