சென்னை, தமிழக முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகிய ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் இருந்து மீண்டு இன்று(23-ந்தேதி) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் நரேன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம், விஜய்யின் திரைப்பயணத்தின் இறுதித் திரைப்படம் எனக் கூறப்படுவதாலும், தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் என்பதாலும் இந்த படத்தை அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். விஜய் ரசிகர்களும், த.வெ.க. கொண்டர்களும் நேற்று இரவு முதலே ஆட்டம் பாட்டத்தை தொடங்கியதால் திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூண்டுள்ளன. சென்னையில் உள்ள முக்கிய திரையரங்குகள் அனைத்தும் பிரமாண்ட கட்-அவுட்கள், வண்ணமயமான பேனர்கள், மலர் மற்றும் மின்னொளி அலங்காரங்களால் ஜொலித்தன. விஜய்யின் கட்-அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து, மலர் தூவி, இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேளதாளங்கள், பட்டாசுகள், ஆட்டம்-பாட்டம் என திரையரங்குகள் முன்பு கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இந்நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சென்னையில் உள்ள திரையரங்கில் இன்று ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் காட்சியை பார்த்தார். படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை முதல் நாள் முதல் காட்சி நான் பார்த்தபோது எந்த அளவிற்கு மகிழ்ச்சி ஏற்பட்டதோ, அதே போன்ற மகிழ்ச்சி இன்று எனக்கு ஏற்பட்டுள்ளது. இது உலகெங்கிலும் உள்ள இந்தியர்களும், தமிழர்களும், சினிமா ரசிகர்களும் பார்த்து ரசிக்க வேண்டிய படம்” என்று தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/today-i-felt-the-same-joy-i-used-to-experience-watching-an-mgr-movie-on-its-opening-day-speaker-jct-prabhakar




