சென்னை, மிலாடி நபி என்பதால் விடுமுறை முடிந்து இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூடியது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, சட்டசபையில் இன்று கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அப்போது திமுக எம்.எல்.ஏ. லட்சுமணன் பேசுகையில், “தமிழகத்தில் பரவி வரும் எச்1,என்1 (பன்றி) காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது; முதியவர், கர்ப்பிணி பெண்களுக்காவது தடுப்பூசி போடும் திட்டம் அரசிடம் உள்ளதா?” என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், “பன்றிக்காய்ச்சல் எனப்படும் எச்1,என்1 ப்ளூ காய்ச்சல் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. மக்கள் அச்சப்பட தேவையில்லை. சென்ற ஆண்டில் முதல் 4 மாதம் (ஜனவரி - ஏப்ரல்) தான் தாக்கம் அதிகமாக இருந்தது, இந்த ஆண்டு மே -ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் தாக்கம் அதிகமாக உள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து தேவைப்பட்டால் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்; முதியவர்களையும், கர்ப்பிணிகளையும் அதிகமாக பாதிக்கும் என்பதால் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:- “கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்" இதற்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், “உயர் சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. முதல் முறையாக 284 மருத்துவர்களுக்கான பணியிடங்களை உருவாக்கியுள்ளோம். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவையை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்”என்றார். தொடர்ந்து சட்டசபையில் பாமக எம்.எல்.ஏ. கணேஷ்குமார் பேசுகையில், “செஞ்சி மருத்துவமனையில் கடந்த ஆட்சிக் காலத்தில் மகப்பேறுக்கான தனிக் கட்டடம் கட்டப்பட்டு ஆபரேஷன் தியேட்டர் நடைமுறைக்கு வராமல் இருந்தது அமைச்சர் ஆனந்திடம் ஒரே ஒரு கோரிக்கைதான் வைத்தேன்; மறுநொடியே முதல்வரை அழைத்து சொன்னதன் விளைவாக 10 நாட்களுக்கு முன்பாக ஆபரேஷன் தியேட்டர் முழு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது; சிசேரியன் மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதற்கு நீர்வளத்துறை அமைச்சருக்கும்(ஆனந்த்) சுகாதாரத்துறை அமைச்சருக்கும்(அருண்ராஜ்) நன்றிக்கடனுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.dailythanthi.com/news/tamilnadu/spreading-swine-flu-minister-arunraj-clarifies



