Doctor Vikatan: என் வயது 58. எனக்கு கடந்த சில வாரங்களாக காது கேட்பதில் சிரமங்களை உணர்கிறேன். இது தற்காலிகமான பிரச்னையாக இருக்குமா. மீண்டும் காது கேட்குமா அல்லது நிரந்தரமான பிரச்னையாக மாறிவிடுமா. என்ன செய்வது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ். காது- மூக்கு - தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை திடீரென ஏற்படும் காதுகேளாமை பிரச்னை ஒரு காதிலோ, இரண்டு காதுகளிலுமோ உணரப்படலாம். அது ஒலியின் அளவு குறைவது அல்லது ஒலியின் தெளிவு குறைவது என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இந்தப் பிரச்னையை 'சடன் சென்சோநியூரல் ஹியரிங் லாஸ்' (Sudden sensorineural hearing loss ) என்றும் சொல்வதுண்டு. அலர்ஜி, சைனஸ் தொற்று, காதை அடைத்துக்கொண்டிருக்கும் மெழுகு என இந்தப் பிரச்னைக்கு இதெல்லாம் காரணமாக இருக்கலாம் என்ற யூகத்தில் இதை அலட்சியம் செய்தால், பிரச்னை தீவிரமாகும்போது, சிகிச்சை அளிப்பதில் சிரமமும் பலனில்லாமல் போவதும் நடக்கும். திடீர் காது கேளாமை பிரச்னைக்குள்ளாவோரில் பத்தில் ஒன்பது பேருக்கு ஒரு காதில் மட்டும் பாதிப்பு ஏற்படுகிறது. பாதிப்புக்குள்ளாவோரில் பலரும் காலையில் தூக்கத்தில் இருந்து எழும்போது இந்தப் பிரச்னையை உணர்ந்ததாகச் சொல்கிறார்கள். இன்னும் சிலர், போன் பேசும்போது ஒரு காதில் கேட்கும் திறன் இழப்பை உணர்ந்ததாகச் சொல்கிறார்கள். சிலர், கேட்கும் திறனை இழப்பதற்கு முன்பாக சத்தமான, அலாரம் போன்ற ஒலியைக் கேட்டதாகச் சொல்கிறார்கள். Doctor Vikatan: அரிப்புக்காக காது குடைந்தபோது செவிப்பறையில் ஓட்டை. கேட்கும் திறன் பாதிக்குமா? இன்னும் சிலர், கேட்கும் திறனை இழப்பதற்கு முன்பாக சத்தமான, அலாரம் போன்ற ஒலியைக் கேட்டதாகச் சொல்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கும் ஒன்றிரண்டு வாரங்களில் ஓரளவுக்கோ அல்லது முழுமையாகவோ கேட்கும் திறன் திரும்ப வருகிறது. தாமதிக்காமல் சிகிச்சை எடுப்போரில் இந்த மாற்றத்தை அதிகம் பார்க்க முடிகிறது. சளி, தொண்டைவலி போன்ற தொற்றுகள், வயது முதிர்வு, அதிக சத்தத்துக்கு உள்ளாவது, சில மருந்துகள் உட்கொள்ளுதல் போன்றவை பரவலான காரணங்கள். ஆனால், இவற்றால் வரும் காது கேளாமை பொதுவாக மெதுவாகவே வரும். இதற்கு முரணாக திடீரென்று வரும் காது கேளாமை, உள் காதில் உள்ள நரம்பு பகுதியில் ஏற்படும் பிரச்னையால் வரலாம். விபத்தில் தலையில் அடிபடுவது, ஆட்டோஇம்யூன் குறைபாடுகள் ஆகியவையும் பரவலான காரணங்களாக இருப்பது தெரிகிறது. இவை தவிர, ரத்த ஓட்டத்தில் பிரச்னைகள் இருப்பவர்கள், காதையும் மூளையையும் இணைக்கும் நரம்பில் கட்டி இருப்பவர்கள், நரம்பியல் பாதிப்புள்ளவர்கள், உள்காதில் பிரச்னை உள்ளவர்கள் போன்றோருக்கும் திடீர் காதுகேளாமை பாதிப்பு ஏற்படலாம். ஹியரிங் பரிசோதனையின் மூலம் இந்த பாதிப்பு உறுதிசெய்யப்படும். மருத்துவர் ஆடியோமெட்ரி (audiometry ) பரிசோதனையைச் செய்து பார்த்து பிரச்னையின் தீவிரத்தைக் கண்டுபிடிப்பார். அதற்கேற்ப ரத்தப் பரிசோதனை, எம்ஆர்ஐ உள்ளிட்ட வேறு சில பரிசோதனைகளையும் மருத்துவர் பரிந்துரைக்கலாம். பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து மாத்திரைகள், செவிப்பறையில் செலுத்தப்படும் ஊசி, ஆன்டிபயாடிக் சிகிச்சை என பல்வேறு சிகிச்சைகளை மருத்துவர் பரிந்துரைப்பார். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் என்ற பெயரில் வெளியாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.vikatan.com/health/suddenly-lost-hearing-will-it-return-or-become-a-permanent-problem




