பூதலூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் பெருமைமிக்க பேராலயமாக திகழும் பூலோகம் போற்றும் பூண்டி மாதா பேராலயத்தில் பூண்டி அன்னையின் பிறப்பு பெருவிழா நேற்று தொடங்கியது. விழாவின் தொடக்கமாக கொடியேற்று விழா நேற்று மாலை நடைபெற்றது. அன்னையின் உருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடியை பக்தர்கள் பக்தியோடு எடுத்து வந்தனர். பூண்டி அன்னையின் சொரூபம் அடங்கிய சிறு சப்பரம், பேண்டு வாத்திய இன்னிசை முழங்க பவனி வந்தது. கொடி மரத்தின் அருகில் பவனி நிறைவடைந்ததும் திருக்கொடியை பூண்டி அன்னையின் பிறப்பு பெருவிழா தொடக்கமாக கும்பகோணம் பிஷப் ஜீவானந்தம் புனிதம் செய்து ஏற்றி வைத்தார். கும்பகோணம் பிஷப் கொடியேற்றத்தின்போது அதிர் வேட்டுகள் முழங்க, பக்தர்கள் மரியே வாழ்க என்று கைகளை உயர்த்தி முழங்கினார்கள். கொடியேற்றத்தை தொடர்ந்து திருவிழா தொடக்கமாக திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருப்பலியை கும்பகோணம் பிஷப் ஜீவானந்தம், தலைமையேற்று நிறைவேற்றினார். இதில் மறை மாவட்ட முதன்மை குரு பிலோமின்தாஸ், மாவட்ட பொருளாளர் அந்தோணி ஜோசப், பூண்டி பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், மறைவட்ட முதன்மை குரு இன்னசென்ட், உதவி பங்கு தந்தையர்கள் அருள் பிரான்சிஸ், அருண்குமார் மற்றும் சுற்றுவட்டார அருட் தந்தையர்கள் கலந்து கொண்டனர். செப்டம்பர் 9ம் தேதிவரை திருவிழா நடைபெறுகிறது. கொடியேற்றத்தினை தொடர்ந்து நவ நாட்களில் ஏற்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பரபவனியும் திருப்பலியும் நிறைவேற்றப்படும். விழாவின் இரண்டாவது நாளான இன்று மாலை மரியா -நல்வாழ்வின் வழிகாட்டி என்ற கருத்தில் கோட்டரப்பட்டி பங்குத்தந்தை அடைக்கலராஜ் பீட்டர் திருப்பலி நிறைவேற்றுகிறார். நாளை மரியா-செபிக்க தூண்டுபவர் என்ற தலைப்பில் வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தல பங்கு தந்தை ஆல்பர்ட் திருபபலி நிறைவேற்றுகிறார். அலங்கார தேர் பவனி தொடர்ந்து தினமும் மாலை திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. பூண்டி அன்னையின் பிறப்பு நாளாக கருதப்படும் செப்டம்பர் 8-ம் தேதி மாலை அன்னையின் பிறப்பு பெருவிழா திருப்பலியை கும்பகோணம் பிஷப் ஜீவானந்தம் நிறைவேற்றி வைப்பதுடன், இரவு மின் அலங்கார தேர்பவனியை புனிதம் செய்து துவக்கி வைக்கிறார். அடுத்த நாள் செப்டம்பர் 9-ஆம் தேதி காலை 6:00 மணிக்கு திருவிழா திருப்பலியை நிறைவேற்றி திருப்பலிக்கு பின் கொடி இறக்கத்துடன் அன்னையின் பிறப்பு பெருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு பூண்டிபேராலய வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை பேராலய நிர்வாகம் செய்துள்ளது. திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/devotional/the-grand-festival-of-poondi-madha-basilica-with-flag-hoisting-ceremony




