தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 2 நாள்கள் விடுமுறைக்குப் பின் இன்று நடைபெறும் சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில், சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ``பொங்கல் பண்டிகை முதல் அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் செயல்படுத்தப்படும். சிலிண்டர் வழங்கும் திட்டம் பொங்கல் பண்டிகை முதல் செயல்பாட்டுக்கு வரும். அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும். முதல்வர் விஜய் வரும் பொங்கல் பண்டிகை முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும். இதற்காக ஆண்டுக்கு 4,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். எரிவாயு சிலிண்டருக்கான விலை நேரடியாக பயனாளியின் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆண்டுக்கு 2.50 லட்சம் வரை வருமானம் பெறுவோரின் குடும்பத்தினருக்கு சிலிண்டருக்கு நிதி வழங்கப்படும்." என அறிவித்தார். இந்த அறிவிப்பு குறித்து அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில், ``தவெகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட ஆறு சிலிண்டர்கள் மூன்றாக குறைப்பா? முதலமைச்சர் மூன்று சிலிண்டர்கள் அறிவித்துள்ள நிலையில், மீதமுள்ள மூன்று கேள்விக்குறிதானா? அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் எனும் தலைப்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் கட்டணமின்றி வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்த தவெக, ஆட்சிக்கு வந்தபின்பு முதற்கட்டம் எனக்கூறி லாவகமாக மக்களை ஏமாற்ற முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கேஸ் சிலிண்டர் ஏற்கனவே, பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதியளித்துவிட்டு, விவசாயிகளின் போராட்டங்களின் வீரியத்திற்கு ஏற்ப படிப்படியாகத் தள்ளுபடித் தொகையை அதிகரித்துக் கொண்டிருக்கும் தவெக அரசு, தற்போது ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் வழங்கப்படும் என்ற வாக்குறுதியைப் பாதியாகக் குறைத்ததோடு, ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற கட்டுப்பாட்டை விதித்திருப்பதும், மீதி எப்போது கிடைக்கும் என்ற தகவலை அறிவிக்காததும் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, ஆட்சிக்கு வந்தபின்பு எந்தவொரு வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றாமல், அரைகுறையாக நிறைவேற்றுவதைப் பார்க்கும்போது, பிரபல வாழைப்பழ காமெடியைப் போல, மூன்று வந்துவிட்டது, மீதமுள்ள மூன்று எங்கே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. எனவே, தவெக கொடுத்த வாக்குறுதியின்படி ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்களை கட்டணமில்லாமல் வழங்கும் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்திட முன்வர வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார். தனியார் தொழிற்சாலையில் ஆய்வுக்குச் சென்ற தவெக எம்.எல்.ஏ; 6 பிரிவுகளில் வழக்கு! - பின்னணி என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/free-cylinders-only-3-cylinders-when-will-the-rest-be-provided-ttv-dhinakaran-asks



