மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் பகுதியானது வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாகும். இங்கு கடற்கரை மட்டுமன்றி, இரட்டைக் காப்பியங்களைப் பறைசாற்றும் சிலப்பதிகார கலைக்கூடமும் இடம்பெற்றுள்ளது. இக்கடற்கரையையும் கலைக்கூடத்தையும் கண்டுகளிக்கத் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமன்றி, வெளிமாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். அப்படி வரும் சுற்றுலாப் பயணிகள் குடிப்பதற்குக் குடிநீரும், அவசரத் தேவைக்குக் கழிவறையும் இன்றி அல்லாடும் நிலையில்தான் இருந்தது. வரலாறு கூறும் தலமாயினும் அடிப்படை வசதிகள் அனைத்தும் கேள்விக்குறியாகவே இருந்தது. சுற்றுலாப் பயணிகள் அடிப்படை வசதிகளின்றித் திண்டாடும் நிலை குறித்து, விகடன் டாட் காமில், 18.06.2026 அன்று "பூம்புகார் கடற்கரையில் அடிப்படை வசதிகள் இன்றி சுற்றுலா பயணிகள் தவிப்பு: கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?" என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம். அச்செய்தியின் எதிரொலியாக, தற்போது பூட்டிக் கிடந்த கழிவறைகள் திறக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இது குறித்து அப்பகுதி மக்களிடையே பேசியபோது: "முன்பெல்லாம் நாங்கள் கடற்கரையில் ஓடி ஆடி விளையாடிக்கொண்டிருந்தாலும், ஆத்திர அவசரத்திற்கு இயற்கை உபாதை கழிக்க நீண்ட தூரம் நடந்துதான் போக வேண்டியிருந்தது. நாங்கள் உடனே போக வேண்டும் என்று நினைத்தாலும் போக முடியாது. ஆனால், இப்போது இந்தக் கடற்கரைக்கு அருகில் பூட்டிக் கிடந்த கழிவறை திறக்கப்பட்டதால், அவசரத் தேவைக்குச் சிரமப்பட வேண்டியதில்லை. கழிவறைக்கு நீண்ட தூரம் நடந்து சென்று வந்ததால் அப்போதெல்லாம் களைப்பாகிவிடுவோம். வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளை வைத்திருப்பவர்கள் என அனைவருக்கும் இந்தக் கழிவறை திறக்கப்படாமல் தூரமாக நடந்து சென்றது ரொம்பவே சிரமமாக இருந்தது. இப்போது அந்த நிலை மாறியுள்ளது. குறிப்பாக இங்கு கடை வைத்திருக்கும் எங்களைப் போன்றவர்களுக்குக் கடையைப் பார்த்துக்கொள்ள ஆளில்லாமல், தூரமாகச் சென்று வர ரொம்பச் சிரமமாக இருந்தது. ஆனால் இப்போது பக்கத்திலேயே திறக்கப்பட்டிருப்பதால், கழிவறையைப் பயன்படுத்துகிறோம். விகடனில் செய்தி வெளியான சில நாள்களிலேயே அதிகாரிகள் இங்கு வந்து கழிவறை குறித்துப் பேசிவிட்டுச் சென்றனர். தற்போது கழிவறையைச் சுத்தம் செய்து, மக்கள் பயன்படுத்தத் திறந்துவிட்டிருக்கிறார்கள். இனி இந்தக் கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அவசரத்துக்கு அல்லாட வேண்டியிருக்காது. விகடனுக்கும், துரித நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் ரொம்ப நன்றி" என்றனர். பூம்புகார் கடற்கரையில் அடிப்படை வசதிகள் இன்றி சுற்றுலா பயணிகள் தவிப்பு: கண்டுகொள்வார்களா அதிகாரிகள்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/governance/poompuhar-beach-restrooms-opened-vikatan-impact




