Fuld artikel
தென்மாவட்டங்களுக்கான பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, கோயம்பேடு பேருந்து நிலையம் சற்றே பொலிவிழந்திருப்பது உண்மைதான் ஆனால், இன்னமும் சென்னைக்குள்ளும், புறநகர்ப் பகுதிகளுக்கும், குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கும் தினசரி மக்கள் வந்து செல்லும் முக்கிய மையமாகவே கோயம்பேடு விளங்கி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தற்போதைய கோயம்பேடு பேருந்து நிலையத்தின் சுகாதாரம் கேள்விக்குறியாகி, பயணிகளை முகம் சுளிக்க வைத்துள்ளது. ``பாத்ரூம் போகக்கூட வழியில்லை, தண்ணியும் இல்லை. மூச்சை அடக்கிக்கிட்டு எவ்வளவு நேரம்தான் பஸ்ஸுக்காகக் காத்திருப்பது?" எனப் பயணிகள் கொந்தளிக்கும் நிலையில் இருக்கிறது, கோயம்பேடு வளாகம். தண்ணீர் இல்லாத கழிவறைகள்; தூர்நாற்றத்தில் மிதக்கும் வளாகம்! ஒரு காலத்தில் சென்னையின் அடையாளமாக, ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையமாகப் பெருமையோடு பேசப்பட்ட கோயம்பேடு பேருந்து முனையம், இன்று பராமரிப்பின்றிப் பாழடைந்து கிடக்கிறது. இங்குள்ள பொதுக் கழிவறைகளில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால், கடுமையான தூர்நாற்றம் வீசுகிறது. பேருந்து நிலையத்தின் உள்ளே நுழையும் போதே வீசும் சிறுநீர் நெடி, பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது. தூய்மைப் பணியாளர்கள் முறையாக நியமிக்கப்படாததாலும், தண்ணீர் தட்டுப்பாட்டினாலும் ஒட்டுமொத்த வளாகமும் தூய்மையற்று, குப்பைக்காடாகக் காட்சியளிக்கிறது. முடக்கப்பட்ட கவுன்ட்டர்களும். திறந்தவெளி கழிப்பிட அவலமும்! தென்மாவட்டப் பேருந்துகள் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, கோயம்பேட்டில் பெரும்பாலான டிக்கெட் கவுன்ட்டர்கள் மூடப்பட்டு, அந்தப் பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி முடக்கப்பட்டுள்ளன. இதனால், முறையான வழிகாட்டுதலோ அல்லது போதிய கழிவறை வசதியோ அந்தப் பகுதிகளில் இல்லை. நள்ளிரவிலும், அதிகாலையிலும் வரும் பயணிகள், அவசரத் தேவைகளுக்குக் கழிவறைகளைத் தேடி அலைகின்றனர். வேறு வழியின்றிப் பலர், பேருந்து நிலையத்தின் ஒதுக்குப்புறமான திறந்தவெளிகளையே கழிப்பிடமாகப் பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தப் பகுதியும் மேலும் சுகாதாரச் சீர்கேட்டிற்கு உள்ளாகியுள்ளது. பயணிகள் வேதனை: நோய் பரவும் அபாயம்! இது குறித்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த சில பயணிகளிடம் பேசியபோது, தங்களின் குமுறல்களை வேதனையோடு பகிர்ந்துகொண்டனர். "பஸ்ஸுக்காகக் கொஞ்ச நேரம் இங்க நிக்கக்கூட முடியல. அந்த அளவுக்குக் கொடூரமான தூர்நாற்றம் வீசுது. கழிவறைகளில் தண்ணி வராததால் உள்ளே நுழையவே பயமாக இருக்கு. இந்தத் தூர்நாற்றத்தால் நிச்சயம் மக்களுக்குப் பெரிய அளவில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. காசு கொடுத்துப் பயணம் செய்யுற பொதுமக்களுக்கு இந்த அடிப்படை வசதியைக் கூடவா அரசு செஞ்சு தரக் கூடாது?" என்று ஆதங்கப்பட்டனர். அரசுக்குக் கோரிக்கை கிளாம்பாக்கத்திற்குப் பேருந்துகள் மாற்றப்பட்டுவிட்டதால், கோயம்பேட்டை அப்படியே கைவிட்டுவிடக் கூடாது என்பதுதான் பொதுமக்களின் பிரதான குமுறலாக இருக்கிறது. இன்னமும் சென்னைக்குள்ளும், அண்டை மாவட்டங்களுக்கும் இங்கிருந்துதான் ஏழை, எளிய மக்கள் பயணிக்கிறார்கள். எனவே, தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட வேண்டும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போதிய தண்ணீர் வசதியுடன் கூடிய தூய்மையான கழிவறைகளை உறுதி செய்ய வேண்டும். மேலும், திறந்தவெளியைச் சிறுநீர் கழிப்பிடமாக மாற்றுவதைத் தடுக்கப் போதிய கண்காணிப்பும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்தப் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. - கலையரசி மு முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Fuld artikel — se linket nedenfor




