தென்காசி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலில், சிறப்புமிக்க ஆடித்தபசு திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் வெவ்வேறு வாகனத்தில் அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான கோமதி அம்மன் தேரோட்டம் நேற்று முன்தினம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி 11-ம் திருநாளான இன்று (28-7-2026) வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வை முன்னிட்டு, இன்று காலை கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8.30 மணிக்கு சந்திர மவுலீஸ்வரர் மற்றும் உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், 9.30 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு மேல் கோமதி அம்பாள் தங்கச்சப்பரத்தில் தெற்கு ரத வீதியில் உள்ள ஆடித்தபசு மண்டபத்திற்கு எழுந்தருளினார். மாலை 4.30 மணிக்கு மேல் சங்கரநாராயண சுவாமி தபசு காட்சிக்கு புறப்பட்டார். 6.45 மணிக்கு ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சங்கரநாராயண சுவாமி, தவக்கோலத்தில் இருந்த கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். தவக்கோலத்தில் காட்சி தந்த கோமதி அம்பாளையும், சங்கரநாராயணரையும் பக்தர்கள் கண்குளிர கண்டு தரிசனம் செய்தனர். இந்நிகழ்வைத் தொடர்ந்து இரவு 11 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சியும், 11.45 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். ஆடித்தபசு வைபவத்தைக் காண்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். எனவே, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு இன்று (28-7-2026) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/devotional/sankarankovil-aadi-thapasu-festival-sankaranarayanar-appeared-before-gomathi-amman




