ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் 'ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்' சீரிஸ்க்கு நல்ல வரவேற்பும், பாராட்டுங்களும் கிடைத்திருக்கின்றன. போஸ் வெங்கட், காயத்ரி, நிகிலா சங்கர், ராஜ் ஐயப்பா ஆகியோர் நடிக்கும் இந்த சீரிஸை இயக்குநர் சிதம்பரம் இயக்குகிறார். 'ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்' சீரிஸுக்காக, அதன் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று போஸ் வெங்கட்டை பேட்டி கண்டோம். Brothers & Sisters Series ரோட்டில் போகும்போது "சார், சார்" என்று மக்கள் வந்து அன்பாகப் பேசுவது எனக்கு ‘மெட்டி ஒலி’ சீரியல் காலத்திலிருந்தே இருக்கிறது. இப்போது 'பிரதர்ஸ் & சிஸ்டர்ஸ்' தொடருக்கு, அதே போன்றதொரு வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போது ஷாப்பிங் மால் அல்லது தியேட்டர்களுக்குச் செல்லும்போது பெண்கள் கூட்டமாக வந்து பேசுகிறார்கள். "சார், 'பிரதர்ஸ் & சிஸ்டர்ஸ்' பார்க்கிறோம், ரொம்ப சூப்பரா இருக்கு" என்று பாராட்டுபவர்கள், கூடவே, "உங்களுக்கு ஏன் சார் இதெல்லாம்?" என்று வருத்தமாகக் கேட்கிறார்கள். என் மனைவியும் இந்த சீரிஸைப் பார்ப்பதே இல்லை. "ஏன் பார்க்க மாட்டேங்குற?" என்று கேட்டால், "நான் அப்புறமா பார்க்கிறேன்" என்று சொல்லிவிடுகிறார். பப்ளிக்கில் பலரும் "பாவம் சார் நீங்க, உங்களுக்கு எவ்வளவு நல்ல பிள்ளைகள்!" என்று ரொம்ப பர்சனலாக எடுத்துக்கொண்டு பேசுகிறார்கள். இடையில் சினிமா, அரசியல் என்று இருந்ததால் மக்களுடனான தொடர்பு கொஞ்சம் குறைந்திருந்தது. இப்போது அரசியலில் அதிகம் ஈடுபடாததால் நிறைய நேரம் கிடைக்கிறது; மக்களோடும் நெருக்கமாக இருக்க முடிகிறது. முதலில் இந்த வெப் சீரிஸ் கதையைக் கேட்டபோது, "இதை எந்த அளவுக்கு கிராண்டாக எடுக்கப் போகிறார்கள்?" என்ற யோசனை இருந்தது. ஏனென்றால், நாங்கள் வந்த காலத்தில் "சீரியலில் நடித்தால் சினிமாவுக்கு வர முடியாது" என்ற ஒரு பிம்பம் இருந்தது. அதை உடைக்க நான் ரொம்பவே போராட வேண்டியிருந்தது. 'தலைநகரம்', 'சிவாஜி', 'சிங்கம்' போன்ற பெரிய படங்களிலும், ரஜினி சார், சூர்யா சார் போன்ற சூப்பர் ஸ்டார்களுடனும் நடித்த பிறகுதான் அந்த பிம்பம் உடைந்தது. ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. இண்டஸ்ட்ரியில் வெப் சீரிஸை ஒரு சினிமா போலத்தான் பார்க்கிறார்கள். அதன் மேக்கிங், தரம் எல்லாமே சினிமாவுக்கு இணையான ஃபீலைத் தருகிறது. இது நம் சினிமா வாழ்க்கையைப் பாதிக்காது, வளர்ச்சியைத்தான் தரும் என்று புரிந்த பிறகே இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இன்றைக்கு சிவகார்த்திகேயன், கவின், ரியோ என சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்து ஜெயிப்பது சாத்தியமாகியிருக்கிறது. அன்றைக்கு எங்களுக்கு அந்த சுதந்திரம் இருக்கவில்லை. இந்த சீரிஸுக்குப் பிறகுதான் திரைத்துறையினர் பலரும், 'சார் உங்களுக்குள் இவ்வளவு ஹியூமர் இருக்கிறதா?' எனக் கேட்கிறார்கள். எனக்குக் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசை. 'தலைநகரம்', 'கவன்' படங்களில் என் காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் சார் கூட, "உனக்கு நல்ல ஹியூமர் வருதுய்யா, ஏன் யாரும் அதை யூஸ் பண்ணல?" என்று கேட்பார். இந்த சீரிஸ் ப்ரோமோக்களைப் பார்த்துவிட்டு, "உங்களுக்குள் இப்படி ஒரு நகைச்சுவை முகம் இருக்கா?" என்று திரையுலகிலும் வீடுகளிலும் ஆச்சரியமாகக் கேட்கிறார்கள். இனிமேல் நிறைய காமெடி ரோல்கள் வரும் என நம்புகிறேன்." முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/kollywood/bose-venkat-interview-brothers-and-sisters-web-series




